'ஏத்தோஸ்' பாதுகாவல் நிறுவனம், புதிய ஒருங்கிணைந்த பாதுகாவல் செயல்பாட்டு நிலையத்தை அமைத்துள்ளது. இந்நிறுவனத்தின் சேவைகளை நாடுவோரால், புதிய நிலையத்தின் மூலம் ஒரு கட்டடத்தின் அனைத்து அம்சங்களையும் கண்காணிக்க முடியும்.
சந்தேகம் தரும் செயல்களைக் கேமராக்களைக் கொண்டு கண்காணிப்பது, பாதுகாப்பு அம்சங்களைக் கவனிப்பது, தண்ணீர், மின்சாரப் பயன்பாடு தொடர்பிலான அம்சங்களைக் கவனிப்பது ஆகிய மூன்றையும் புதிய நிலையத்தில் மேற்கொள்ளலாம்.
பாதுகாப்பு உள்பட இதர 'ஃபசிலிட்டீஸ் மேனேஜ்மென்ட்' எனப்படும் கட்டட செயல்பாட்டு நடவடிக்கைகளை உள்ளடக்கும் சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைந்த நிலையங்களில் இந்நிலையம் அடங்கும் எனக் கருதப்படுகிறது.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, 'ஏத்தோஸ் ஹோல்டிங்ஸ்' நிர்வாக இயக்குநர் ஆல்ஃபிரெட் ஃபாக்ஸ் ஆகியோர் இந்நிலையத்தை நேற்று திறந்துவைத்தனர். புதிய ஒருங்கிணைந்த செயல்பாட்டு நிலையம் கார்ப்பரேஷன் டிரைவில் அமைந்துள்ளது.
கட்டட செயல்பாடுகளின் தொடர்பில் 'ஏத்தோஸ்'ஸின் முயற்சிகளை அமைச்சர் லீ தமது உரையில் பாராட்டினார். அதிகமான நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் ஆக்கபூர்வமாகச் செயல்படும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் திரு லீ கூறினார்.
"பல்வேறு கட்டட செயல்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தளத்தில் மேற்கொள்வதன் மூலம் நிறுவனங்கள் கூடுதல் ஆக்கபூர்வமாகவும் பலனளிக்கும் வகையிலும் இயங்கமுடியும்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
கட்டட செயல்பாடுகள் தொடர்பிலான 30 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள புதிய மானியம் சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு அதைக் கட்டட உரிமையாளர்களும் சொத்து மேம்பாட்டாளர்களும் உபயோகித்துக்கொள்ளலாம் என்பதைத் திரு லீ சுட்டினார். இவ்வாண்டு பிற்பாதியிலிருந்து மானியம் வழங்கப்படும்.

