ஆசியான் நாடுகள் அவற்றுக்கு இடையிலான பொருள் வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவதன் தொடர்பில் நேற்று பேரப்பேச்சைத் தொடங்கியுள்ளன.
தென் கிழக்காசிய நாடுகளுக்கு இடையில் பொருளியல் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதும் வர்த்தகத்தை அதிகரிப்பதும் அவற்றின் இலக்குகள்.
கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் நாடுகளின் பொருளியல் அமைச்சர்கள் சந்திப்பில் பேரப்பேச்சுகள் தொடக்கம்கண்டன.
28ஆவது முறையாக இடம்பெறும் சந்திப்பில் சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கலந்துகொண்டார்.
கம்போடியா இந்த ஆண்டு ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளது. அதன் பொருளியல் முன்னுரிமைகளுக்கு சிங்கப்பூர் ஆதரவு தரும் என்று அமைச்சர் கான் தெரிவித்தார்.
பொருளியல் மீட்சிக்கு உதவும்வகையில் ஆசியான் நாடுகள் இணைந்து பணியாற்றக்கூடிய மூன்று முக்கிய அம்சங்களை அவர் எடுத்துரைத்தார்.
''முதலாவது, தொடரும் ஒற்றுமை மற்றும் வட்டாரப் பொருளியல் ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம். இரண்டாவதாக, சவால்களை எதிர்கொள்ள ஆசியான் நாடுகள் விரைந்து கூட்டாகச் செயல்படுதல். மூன்றாவதாக, மின்னிலக்கம், பசுமைப் பொருளியல் போன்ற துறைகளில் ஆசியான் தன்னைத் துடிப்புடன் செயல்படும் தொடர்ச்சியாக முன்னேற்றம் காணும் அமைப்பாக நிலைநிறுத்திக் கொள்ளுதல்," என்றார் அமைச்சர் கான்.

