புவாங்ேகாக் ஸ்குவேர் கடைத்
தொகுதி அருகே பாதசாரிகளிடமும் கார்களிடமும் வாளை வீசியபடி இருந்த ஆடவர் ஒருவர் மீது புதன்கிழமை (மார்ச் 16) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சமுராய் வாளைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஃபடில் யூசோப் எனும் அந்த 37 வயது ஆடவர் காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
திரு அமிலா சிந்தானா என்
பவரை மூன்று முறை வாளால் தாக்கியதாக சிங்கப்பூரரான ஃபடில் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (மார்ச் 14) பட்டப் பகலில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் திரு சிந்தானாவின் இடது கை, தோள்பட்டையில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
ஃபடில், வாளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, என்னவென்றே தெரியாத சில மாத்திரைகளை உட்கொண்டதாகத் தெரிகிறது என காவல்துறை முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.
அந்த ஆடவர் வசித்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் மின்தூக்கித் தளத்தில் பொதுமக்கள் சிலருடன் தகராற்றில் ஈடுபட்டிருந்தார்.
"பின்னர், கண்மூடித்தனமாக சாலையைக் கடந்த அவர், வாளைக் கொண்டு அவ்வழியாகச் சென்ற ஐந்து கார்களைத் தாக்கியதாகத் தெரிய வந்தது," என்றும் காவல்துறை குறிப்பிட்டது.
புவாங்ேகாக் ஸ்குவேர் கடைத்தொகுதிக்கு முன்னால் உள்ள போக்குவரத்துச் சந்திப்பில் நின்றுகொண்டிருந்த திரு சிந்தானா மீது ஃபடில் வாளை வீசியதாகக் கூறப்படுகிறது. திரு சிந்தானாவை எதிர்கொண்டபோது ஃபடில் தரையில் வழுக்கியதைச் சாதகமாகப் பயன்படுத்திய திரு சிந்தானா, அவரைக் கீழே அழுத்திப் பிடித்து கட்டுப்படுத்தினார்.
இதனைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் சிலர் ஓடி வந்து, காவல்துறையினர் வரும்வரை ஃபடிலைக் கட்டுப்படுத்த உதவினர். இச்சம்பவத்தில் வேறோர் ஆடவருக்கு முட்டிப் பகுதியில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
ஃபடிலுடைய செயல், பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்பது இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், இரு பாக்கெட்டுகள் மஞ்சள் மாத்திரைகளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மனநலப் பரிசோதனைக்காக அவர் சாங்கி சிறைச்சாலை காம்பிளெக்ஸ் மருத்துவ மையத்தில் மூன்று வாரங்களுக்கு விசாரணைக் காவலில் வைக்கப்படுவார். இந்த வழக்கு ஏப்ரல் 6ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

