'விடிஎல்' எனும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதையொட்டி இவ்வாண்டு சிங்கப்பூருக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது, ஹோட்டல்களுக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டு பிற்பாதியில் ஹோட்டல் சந்தை ஓரளவு மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக 'சிபிஆர்இ' சொத்து நிறுவனம் ஆக அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக சொகுசு சேவைகள் சம்பந்தப்பட்ட அம்சங்களால் சிங்கப்பூரின் ஹோட்டல் சந்தை பலனடைந்ததாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. சிங்கப்பூரின் ஹோட்டல் சந்தை நிலவரத்தை விவரிக்க அறிக்கை வரையப்பட்டது.
கிருமித்தொற்று சூழலால் பயணத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் பயணம் மேற்கொள்ள முடியாமல் போனதால் மக்களிடையே அதற்கான தேவை திடீரென கணிசமாக அதிகரிக்கக்கூடும்.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் சென்ற ஆண்டு பிற்பாதியில் சிங்கப்பூருக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 172.4 விழுக்காடு கூடியது. பயணங்கள் மேற்கொள்வதற்கான தேவை திடீரென அதிகரிக்கக்கூடும் என்பதற்கு இது சான்று. அதனால் சிங்கப்பூரின் ேஹாட்டல் சந்தை மேம்படும் என்று 'சிபிஆர்இ' ஓரளவு நம்பிக்கை கொண்டுள்ளது.
கொள்ளைநோய்ப் பரவலால் பல பொருள்கள், சேவைகளின் விலை அதிகரித்துள்ளது. புதிய கொவிட்-19 கிருமிகள் உருவெடுக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. சீனாவிற்குச் சென்று வருவதற்கான பயணத் திட்டங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், தொடர்ந்து மீண்டுவர சிங்கப்பூர் வலுவான அடித்தளத்தை அமைத்திருப்பதாக 'சிபிஆர்இ' நம்புகிறது.

