ஆழ்மன சிகிச்சையில் பயிற்சி பெற்ற 46 வயது திருவாட்டி அமிலியா காங், குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரியைப் போன்று நடித்து ஏமாற்ற முயன்ற மோசடிக்காரரின் வலையில் வீழாமல் தப்பித்தார்.
நேற்று முன்தினம் தம்மை குடிநுழைவுத் துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஆடவர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். திருவாட்டி காங் கொவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ரெம்டெசிவர் மருந்தை, உரிமம் இன்றி இறக்குமதி செய்வதாகக் குற்றம்சாட்டினார். தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் மட்டுமே அந்த மருந்தை நோயாளிகளுக்குத் தர முடியும் எனும் நிலையில் திருவாட்டி காங் அவ்வாறு செய்ய அனுமதி இல்லை என்றார் அந்த ஆடவர்.
அவரது சிங்கப்பூர் முகவரிக்கு அனுப்பப்பட்ட பொட்டலத்தை ஷங்காய் சுங்கத்துறை தடுத்து வைத்திருப்பதாக அவர் கூறினார்.
இதுகுறித்து சீன அதிகாரிகள் சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்திற்குத் தகவல் அளித்திருப்பதாகவும் அந்த ஆடவர் கூறினார். அதிர்ஷ்டவசமாக திருவாட்டி காங் அந்த மோசடிக்காரரிடம் ஏமாறவில்லை.
ஆழ்மன சிகிச்சை அளிப்பதற்குரிய பயிற்சி பெற்றிருக்கும் அவர், மயக்கநிலைக்குக் கொண்டுசென்று தாம் சொல்வதைக் கேட்கத் தூண்டும் உத்திகளை அந்த ஆடவர் பின்பற்றுவதைக் கண்டுகொண்டதாகச் சொன்னார்.
+65 6391 6100 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகளைப் போன்று நடிக்கும் சிலர் அழைத்து ஏமாற்ற முயலும் மோசடி குறித்து அறிந்திருப்பதாக ஆணையம் நேற்று தெரிவித்தது.
ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கீழறுக்கும் இத்தகைய மோசடிச் செயல்களைக் கடுமையாகக் கருதுவதாகவும் அது தெரிவித்தது.
இதுபோன்ற பல்வேறு மோசடிச் சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

