கத்திகள், வாள்கள், பிற ஆபத்தான ஆயுதங்கள் போன்ற பொருள்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் இந்த வாரம் நடந்த பிறகு அவை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சந்தித்த சில்லறை விற்பனையாளர்கள் சிலர் இது தங்களுக்கு கவலையளிக்கிறது என்று கூறினார்கள்.
ஏனெனில் அவர்கள் யாரும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருக்க விரும்பவில்லை.
அத்தகைய பொருள்களை வாங்குபவர்கள் அவற்றுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று காவல்துறை வழிகாட்டுதல்கள் உள்ளன என்றாலும் ஆயுதங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தைக் குறைப்பதற்கு இந்த வர்த்தகர்கள் தங்களுக்கென சொந்த விதிகளையும் அமல்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் வாங்குபவர்கள் இந்த பொருள்களைத் தவறாக பயன்படுத்தமாட்டார்கள் என்பதற்கு இவை உத்தரவாதம் அளிப்பதில்லை என்று சில்லறை விற்பனையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
சட்டத்தின்படி, சில ஆயுதங்களை காவல்துறை உரிமம் மற்றும் ஒழுங்குமுறை துறையின் ஒப்புதலுடன் இறக்குமதி செய்யலாம்.
இணைய ஆயுத விற்பனையாளர்களான கேஎன்எக்ஸ் நிறுவனத்தின் வர்த்தக உரிமையாளர் திரு ரேமண்ட் கோ, காவல்துறைக்கு அனுப்பப்படும் பதிவேட்டில் வாள்கள் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்களை வாங்குபவர்களின் விவரங்களை அவற்றை விற்கும் நிறுவனங்கள் பதிவு செய்கின்றன என்றார்.
சுல்தான் பிளாசா கடைத் தொகுதியில் நல்னோ.காம் எனும் வெளிப்புற உபகரணக் கடையை நடத்தி வரும் திரு வருண் சிங், 38, கத்திகள், நீண்ட வாள்கள், கோடரிகள் ஆகியவற்றைத் தவறாக ஆயுதங்களாகப் பயன்படுத்தினாலும், விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள், படை வீரர்கள் போன்ற நிபுணத்துவ தொழில் புரிபவர்களுக்கு அவை அத்தியாவசியமான கருவிகளாகப் பயன்படுகின்றன என்றார்.
"அட்டைப் பெட்டிகளை வெட்டுவதற்கு அல்லது தாவரங்களை வெட்ட இக்கருவிகள் பயன் படுகின்றன. இந்தப் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்தும் சிலரின் செயல்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது," என்று அவர் கூறினார்.
பொது இடத்தில் தாக்குதல் நடத்தக்கூடிய ஆயுதம் வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு பிரம்படிகளுடன் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

