வட கொரியாவிற்கு கிட்டத்தட்ட $576,000 மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட ஆடம்பரப் பொருள்களை விநியோகித்த மூன்று நிறுவனங்களின் இயக்குநரின் சிறைத்தண்டனை இரட்டிப்பாகியுள்ளது.
அந்த வழக்கின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து, அவரது சிறைத்தண்டனை மூன்று வாரங்களில் இருந்து ஆறு வாரங்களாக அதிகரித்துள்ளது.
மூன்று நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்ட அபராதம் இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்காக உயர் நீதிமன்றத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கடந்த திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டது.
எஸ்சிஎன் சிங்கப்பூர், சின்டோக் டிரேடிங், லாரிச் இன்டர்நேஷனல் ஆகிய மூன்று உள்ளூர் நிறுவனங்களின் முக்கிய முடிவெடுக்கும் அதிகாரியாக சிங்கப்பூரரான 61 வயது சோங் ஹாக் யென் (படம்) இருந்தார். மேலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் அவர் குறைந்தது 95 விழுக்காட்டு பங்குகளை வைத்திருந்தார்.
டிசம்பர் 2010க்கும் நவம்பர் 2016க்கு இடையில், அந்த நிறுவனங்கள் வடகொரியாவிற்கு வாசனைத் திரவியங்கள், அழகுச் சாதனப் பொருள்கள், கைக்கடிகாரங்கள், இசைக்கருவிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்தன. அந்த வர்த்தகத்தில் அந்த நிறுவனங்களுக்குக் கிடைத்த மொத்த லாபம் $122,000.
வடகொரியாவிற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளியல் தடைகளை நடைமுறைப்படுத்த இயற்றப்பட்ட சிங்கப்பூர் சட்டத்தின்கீழ், குடியரசில் உள்ள ஒருவரோ அல்லது நாட்டிற்கு வெளியே உள்ள சிங்கப்பூரர்களோ தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட பொருள்களை வழங்கவோ அல்லது விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
"சிங்கப்பூரின் நிலைப்பாடு மற்றும் நற்பெயருக்கு குறிப்பிடத்தக்க தீமை விளைவித்ததாலும், சில ஆண்டுகளாக இந்தக் குற்றச்செயல்கள் நடந்ததாலும் இன்னும் கணிசமான தண்டனை வழங்கப்பட வேண்டும்," என்று சோங்கின் சிறைத்தண்டனையை உயர்த்திய உயர் நீதிமன்ற நீதிபதி ஐய்டிட் அப்துல்லா கூறினார்.
"இது நன்கு திட்டமிடப்பட்ட செயல். அது குற்றத்தின் அளவையும் உயர்த்தியதுடன், இதில் கணிசமான லாபமும் கிடைத்துள்ளது. ஆகவே தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி அப்துல்லா விவரித்தார்.