உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
மாஸ்கோ மீது தடை விதிப்பது என்று சிங்கப்பூர் எடுத்த முடிவு சரியானது என்று 10 பேரில் ஆறு பேர் ஒப்புக்கொள்கிறார்கள்.
இணையம் வழி மார்ச் 9, 10ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் இந்த நிலவரம் தெரியவருகிறது.
அந்த ஆய்வில் 1,711 சிங்கப்பூரர்கள் பேட்டி காணப்பட்டனர். அவர்களில் 95 விழுக்காட்டினர் உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அல்லது பரிதாபப்பட்டனர் என்று 'பிளாக்பாக்ஸ் ரிசர்ச்' என்ற அந்த ஆய்வு தெரிவித்தது.
நேட்டோ அமைப்பில் சேர உக்ரேன் முயல்வதாகக் கூறி அதை எதிர்த்து அந்த நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி படையெடுத்தது.
அதை உலக நாடுகள் பலவும் கண்டித்து ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான தடையை அமல்படுத்தி இருக்கின்றன.
சிங்கப்பூரும் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்தது. இதை ஆய்வில் கலந்துகொண்ட 60 விழுக்காட்டினர் ஆதரித்தனர். தங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது அல்லது கருத்து எதுவும் தங்களிடம் இல்லை என்று 35 விழுக்காட்டினர் கூறினர்.
அந்த ஆய்வு ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, சிங்கப்பூரில் 18க்கும் அதிக வயதுள்ள மொத்தம் 6,920 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்டது.
ஆய்வில் கலந்துகொண்ட சிங்கப்பூரர்களில் 4 விழுக்காட்டினர் தாங்கள் ரஷ்யாவை ஆதரிப்பதாக கூறினர்.
ஆஸ்திரேலியா, இந்தியாவை பொறுத்தவரை 10 பேரில் கிட்டத்தட்ட ஒன்பது பேர் உக்ரேனை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.
சீனாவை பார்க்கையில், 3 விழுக்காட்டினர் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 71 விழுக்காட்டினர் உக்ரேன் மீது பரிதாபப்பட்டனர். தங்களுடைய அரசு நிலை பற்றி தாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சீனாவில் 10 பேரில் எட்டு பேருக்கும் மேற்பட்டவர்கள் கூறினர்.
பத்து சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட ஏழு பேர் உக்ரேன் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என்று தெரிவித்தனர்.
சீனாவில் இது பற்றி தங்களுக்குத் தெரியாது என்று கூறியவர்கள் கிட்டத்தட்ட பாதிப்பேர். அமெரிக்காதான் காரணம் என்று சீனாவில் 3% தெரிவித்தனர்.