சிங்கப்பூரில் வியாழக்கிழமை புதிதாக 10,713 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. இது அதற்கு முந்திய நாளின் அளவைவிட குறைவு.
வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி 1,230 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுவும் முந்திய நாளின் அளவைவிட குறைவு என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இருந்தாலும் புதிதாக 12 பேர் மரணம் அடைந்தனர். இந்த எண்ணிக்கை முந்திய நாளான புதன்கிழமை 11 ஆக இருந்தது.
மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் 29 பேர் இருந்தனர். 146 பேருக்கு உயிர்வாயு சிகிச்சை தேவைப்பட்டது.
உள்ளூரில் கிருமி தொற்றியோரில் 9,425 பேருக்கு ஏஆர்டி பரிசோதனை மூலம் தொற்று தெரியவந்தது. இதர 1,160 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மூலம் தொற்று தெரியவந்தது.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 128 பேருக்குத் தொற்று இருந்தது. இவர்களில் 38 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மூலம் தொற்று தெரியவந்தது. இதர 90 பேருக்கு ஏஆர்டி பரிசோதனை மூலம் தொற்று தெரிந்தது.
வியாழக்கிழமை வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் 0.73 ஆகக் குறைந்தது. இது முந்திய நாளில் 0.76 ஆக இருந்தது. கொவிட்-19 கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 986,320 ஆக இருந்தது. மொத்த மரண எண்ணிக்கை 1,182 ஆகியது.