தொழில்நுட்பமும் சமூக ஊடகமும் வாழ்க்கையில் இப்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. என்றாலும்கூட சட்ட அமலாக்க அமைப்புகளைப் பொறுத்தவரை, நம்பிக்கையும் ஒளிவுமறைவு இல்லாத நிலையும் இன்னமும் உயிர்நாடியானவை என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் முன்னாள் ஆணையர் கில் கெர்லிகௌஸ்கி இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.
நம்பிக்கையைத் தொடர்ந்து நிலைநாட்டி வர தவறினால் எந்தவொரு காவல் துறையின் மதிப்பும் மரியாதையும் போய்விடும் என்று அவர் தெரிவித்தார்.
அந்த முன்னாள் ஆணையர் மார்ச் 1ஆம் தேதி 200க்கும் மேற்பட்ட உள்துறைக் குழு அதிகாரிகளுக்கு 'ஸூம்' செயலி மூலம் விரிவுரையாற்றினார்.
திரு கெர்லிகௌஸ்கி, 72, உள்துறைக் குழு பயிலகத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று இருக்கிறார். அவருக்கு 40 ஆண்டுகால சட்ட அமலாக்கத் துறை அனுபவம் உண்டு.
உள்துறைக் குழு தலைவர்களுக்காகவும் அதிகாரிகளுக்காகவும் பாதுகாப்பு, தலைமைத்துவம் ஆகிய துறைகளில் உலகளவில் பிரபலமான வல்லுநர்களை அழைத்து உரை நிகழ்ச்சிகளை இந்தப் பயிலகம் வழக்கமாக நடத்தி வருகிறது.
இதையொட்டி திரு கெர்லிகெளஸ்கி அழைக்கப்பட்டதாக இந்தப் பயிலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அன்வர் அப்துல்லா தெரிவித்தார்.
சட்ட அமலாக்க அமைப்பு எந்த அளவுக்குப் பெரியதாக இருந்தாலும் அது ஒரு பிரச்சினை அல்ல. அந்த அமைப்பு தாங்கள் சேவையாற்றும் மக்களிடம் நம்பிக்கை, ஒத்துழைப்பை இழந்துவிட்டால் ஆற்றலுடன் திகழ முடியாது என்று மார்ச் 2ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு ஸூம் செயலி மூலம் பேட்டியளித்த அந்த முன்னாள் ஆணையர் குறிப்பிட்டார்.
சட்ட அமலாக்கத் துறையைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்களின் பணி எப்படி மேம்பட்டு வந்து இருக்கிறது என்பது பற்றிய தனது அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார். சட்ட அமலாக்க அமைப்புகளில் நம்பிக்கையைப் பலப்படுத்துவது எப்படி என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
முன்பெல்லாம் பெரும்பாலான காவல்துறை பயிற்சிகளில் கைது நடவடிக்கைகளில்தான் ஒருமித்த கவனம் செலுத்தப்பட்டது. இப்போது ஒருவரின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்வதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பெரிதும் மாறிவிட்டது. சட்ட அமலாக்க அமைப்புகளில் இளையர்கள் அதிகம் சேர்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், முதிய பயிற்றுவிப்பாளர்களுக்கும் இளம் தலைமுறை மாணவர்களுக்கும் இடையில் ஒத்துழைப்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமானால் இந்த இரண்டு குழுவினரும் ஒருவர் மற்றொருவருக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தங்கள் சகாக்களுக்கு அப்பாற்பட்டு மற்றவர்களோடும் உறவைப் பேணி வளர்ப்பதில் அவர்கள் அதிக கவனத்தைச் செலவிட வேண்டும் என்றார் அவர்.
வீதிகளில் விவேகமாக நடந்துகொள்வது எப்படி என்பதை முதிய அதிகாரிகளிடம் இருந்து இளம் அதிகாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல, முதிய அதிகாரிகள் அச்சப்படாமல் தொழில்நுட்பங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

