கி.ஜனார்த்தனன்
வழிபாட்டுத் தலங்களில் கிருமிப்
பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பங்குனி உத்திரத் திருவிழாவில் மக்கள் தொடர்ந்து
புரிந்துணர்வுடன் நடந்தகொண்ட விதம், தலைவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலின் தொடக்கத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாகப் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுடன் புனித மரம் பாலசுப்பிரமணியம் ஆலயத்தின் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது. தற்போதைய கொவிட்-19 சூழ்நிலையில் இவ்வாண்டும் பால்குடங்களுக்கு
மட்டுமே அனுமதி தரப்பட்டது. பக்தர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று நண்பகல் வரை தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். கிட்டத்தட்ட 10,000 பக்தர்களும் 150 தொண்டூழியர்களும் திருவிழாவில் பங்குபெற்றனர்.
சிங்கப்பூரில் கொவிட்-19
கிருமிப் பரவல் தொடங்கிய 2020ஆம் ஆண்டில் அந்தத் திருவிழாவில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாததை அடுத்து, மறுஆண்டில் பால்குடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு போலவே இவ்வாண்டிலும் அலகு காவடிகளுக்கு அனுமதியில்லை. ஆனால் முடிக் காணிக்கை செலுத்துதல்
அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் பால் குடம் எடுக்கும் பக்தர்கள் 3,500 முதல் 4,000 வரையிலும் பொது பக்தர்கள் 3,000 முதல் 3,500 வரையிலும் அனுமதிக்கப்பட்டனர். முன்பதிவு செய்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களாக இருக்கவேண்டும். ஆலயத்தில் தயாராக வைக்கப்பட்டிருக்கும் பால்குடங்
களையே பக்தர்கள் செலுத்த வேண்டும் என்று ஆலயம் விதிமுறை விதித்திருந்தது. பால்குடத்திற்காகப் பதிவு செய்பவர்கள், கூடுதலாக தங்களுடன் செல்ல விரும்பும் ஒருவருக்காகப் பதிவு செய்யலாம். ஆலய தரிசனத்திற்கும் முன்பதிவு தேவைப்பட்டது. தரிசனத்திற்காக செல்ல விரும்பும் பக்தர், தான் உட்பட அதிகபட்சமாக ஐந்து பேர் வரை பதிவு செய்யலாம். ஆலய வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதும் மக்களின் விழிப்புநிலை தளரவில்லை என்று திருவிழாவின் சிறப்பு விருந்தினரும் நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினருமான திரு டெரிக் கோ தெரிவித்தார். மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வருவதைக் கண்டு மகிழ்வதாகக் கூறிய திரு கோ, மக்களில் பெரும்பாலானோர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதால் பங்குனி உத்திரம் போல திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறுவதாகக் கூறினார்.
"ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இதில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று திரு கோ, செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விழாவின்போது வருகை அளித்திருந்த சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், பக்தர்களின் அமைதியையும் கட்டுக்கோப்பையும் பாராட்டினார். கடந்த முப்பது ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இங்கு வந்ததாகக் கூறிய திரு சண்முகம், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும் அனைவரும் வரிசையில் நின்று பொறுமையுடன் இறை தரிசனம் செய்ததைத் குறிப்பிட்டார். மெல்ல இயல்புநிலைக்குத் திரும்புவதில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை கோயில் சூழல் காட்டுவதாக அவர் கூறினார். இரண்டாவது முறையாக பங்குனி உத்திரத்திற்காக பால்குடம் ஏந்திய நீ சூன் குழுத்தொகுதி யின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் கேரி டான், மக்களுக்கு ஆறு
தலையும் உறுதியையும் இத்தகைய சமயத் திருவிழாக்கள் தருவதாகவும் இத்திருவிழாக்கள் தொடர்வதற்காக மக்கள் அனை
வரும் கைக்கோத்து செயல்படவேண்டும் எனக் கூறினார்.

