முன்னாள் தேசிய காற்பந்து ஆட்டக்காரர் கே. கண்ணன், காற்பந்து நடுவர் திரு ராஜமாணிக்கம் ஆகியோர் மீதான வாழ்நாள் தடையை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் நீக்கியது.
தங்கள் மீதான தடையை நீக்கக் கோரி இருவரும் எழுத்துபூர்வமாகக் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சங்கம் கூறியது.
பணம் பெற்றுக்கொண்டு காற்பந்து ஆட்டங்களின் முடிவை முன்கூட்டியே நிர்ணயிக்கும் குற்றத்தில் ஈடுபட்டு, நேர்மையற்ற வகையில் நடந்துகொண்டதற்காக 1994ஆம் ஆண்டில் ராஜமாணிக்கம் மீதும் 1995ஆம் ஆண்டில் கண்ணன் மீதும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இருவரின் மேல்முறையீட்டை சங்கம் மிகத் தீவிரமாகப் பரிசீலித்ததாக அதன் தலைவர் லிம் கியோ டோங் தெரிவித்தார்.
"இந்த இருவர் மீதான தடையை நீக்குவதன் மூலம் காற்பந்து தொடர்பாக நிகழும் ஊழல்களுக்கு எதிராக சங்கம் கடுமையான நட
வடிக்கைகளை எடுக்காது என்றாகிவிடாது. காற்பந்தில் ஊழல் குற்றங்கள் சகித்துக்கொள்ளப்படாது. எங்களது இந்த நிலைப்பாடு தொடர்கிறது.
"ஊழல் குற்றத்தில் ஈடுபடும் விளையாட்டாளர் அல்லது அதிகாரி மீது சங்கம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்," என்று திரு லிம் தெரிவித்தார்.
தங்கள் மீதான தடையை நீக்கக் கோரி 60 வயது கண்ணணும் 70 வயது ராஜமாணிக்கமும் பலமுறை மேல்முறையீடு செய்ததாகவும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் சங்கம் கூறியது.
1994ஆம் ஆண்டு மே மாதம் மலேசிய லீக் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூருக்கும் பெர்லிசுக்கும் இடையிலான ஆட்டத்தில் சிங்கப்பூர் ஆட்டக்காரர் ஒருவருக்கு $80,000 லஞ்சம் கொடுக்க இரு
வருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியதற்காக 1995ஆம் ஆண்டில் கண்ணணுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
அதன்படி காற்பந்து ஆட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் அவரால் ஈடுபட முடியாமல் போனது. இருவருடன் சேர்ந்து சதித் திட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக கண்ணனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் $40,000 அபராதமும் விதிக்கப்பட்டது. லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அவருக்கு 18 மாதச் சிறையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
$1,000 லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக நடுவர் பட்டியலி
லிருந்து ராஜமாணிக்கம் நீக்கப்பட்டார். அவருக்கு வாழ்நாள் தடையுடன் எட்டு மாத சிறையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
1994ஆம் ஆண்டு கிளந்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூருக்குச் சாதகமாக நடந்துகொள்ளும் மலேசிய நடுவரை நியமிக்க ராஜமாணிக்கத்துக்கு லஞ்சம் தரப்பட்டது. தமக்கு உதவிய
வழக்கறிஞர்களுக்கும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் கண்ணன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
"காற்பந்துதான் எனது வாழ்க்கையாக இருந்தது. சமுதாயத்துக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க என்னால் முடிந்ததைச் செய்வேன்," என்று கண்ணன் தெரிவித்தார்.
"காற்பந்து தொடர்பான மேம்பாட்டுத் திட்டங்களில் எனது
பங்களிப்பு இருக்கும். நடுவர் மன்றத்துக்கு எனது சேவைகள் தேவைப்பட்டால் அதற்கும் நான் தயார். என்மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனது மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்துக்கு எனது நன்றி," என்றார்
ராஜமாணிக்கம்.

