தங்களது வங்கிக் கணக்கு விவரங்களையும் சிங்பாஸ் கணக்கு விவரங்களையும் மோசடிக்காரர்களுக்குக் கொடுத்து, அவர்கள் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் பங்கை இரு இளையர்கள் பெற்றனர்.
அவர்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டு புதிய வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டன. அதன் மூலம் மோசடி செய்து கிட்டத்தட்ட $1 மில்லியன் பணம் ஈட்டப்பட்டது.
அந்த குற்றங்களுக்காக 19, 25 வயது நிரம்பிய அந்த ஆடவர்கள் மீது வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும். காவல்துறை அந்த விவரங்களைத் தெரிவித்தது.
சிங்பாஸ் கணக்கு விவரங்களைக் கொடுத்தால், பணம் தருவதாகக் கூறும் விளம்பரங்களை டெலிகிராம், இன்ஸ்டகிராம் செயலிகளில் அவ்விருவரும் கண்டனர்.
அதைக் கொண்டு மோசடிக்காரர்கள் வங்கிக் கணக்குகளைத் திறந்து, ஏமாற்றி ஈட்டப்பட்ட கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயற்சி செய்திருக்கின்றனர். அந்த இரு வெவ்வேறு சம்பவங்களும் கடந்த ஆண்டு நடந்தன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவர்களுக்கு மூவாண்டுகள் வரை சிறைத்தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


