சமூக ஊடகத்துடன் சேர்ந்து பணிக்குழு நடைமுறை தீர்வுகாணும்
டுவிட்டர், இன்ஸ்டகிராம், போன்ற சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப் போன்ற தளங்களிலும் இப்போது இளையர்கள் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
இந்தச் சூழலில், தொழில்நுட்பத் தளங்களுடன் சேர்ந்து இணையத்தில் ஆக்ககரமான நடைமுறைகளை மேம்படுத்தும் வழிகளைக் காணும் வகையில் பல அமைப்புகளை உள்ளடக்கிய மனநல சிறப்புப் பணிக்குழு முயன்று வருகிறது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், இளையர் மனநலம் பற்றிய குடிமக்கள் குழு தொடக்க நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றினார்.
இணைய துன்புறுத்தல் போன்ற ஆபத்துகளைக் களைவதற்கான நடைமுறைத் தீர்வுகளை எப்படி உருவாக்குவது என்பது பற்றி அந்தப் பணிக்குழு ஆராயும் என்று திருவாட்டி சுன் கூறினார். அந்தச் சிறப்புப் பணிக்குழு கடந்த ஜூலையில் அமைக்கப்பட்டது. அது தனது பரிந்துரைகளைச் சீரமைத்து வருகிறது.
பொதுமக்களின் கருத்துகளை வரும் மாதங்களில் அது நாடும். அந்தக் கருத்துகளைக் கொண்டு மனநலம் தொடர்பான தேசிய உத்தி உருவாக்கப்படும். செயல்திட்டமும் தீட்டப்படும்.
மனநலச் சேவைகளை எளிதாக எட்டுவதற்கான வழிகளை அந்தக் குழு ஆராய்ந்து வருகிறது.
மனநல உதவி நாடுவதில் ஏற்படக்கூடிய சங்கடமான உணர்வைக் குறைப்பதற்கும் அந்தக் குழு முயலும் என்று பணிக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான திருவாட்டி சுன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் அந்தச் சிறப்பு பணிக்குழுவை அமைத்து உள்ளன.
சிங்கப்பூரில் மனநல முயற்சி களை அந்தக் குழு மேற்பார்வையிடுகிறது. பல அமைப்புகளும் சேர்ந்து செயல்படத் தேவையான அம்சங்களில் அது ஒருமித்த கவனம் செலுத்துகிறது.
நேற்று தொடங்கப்பட்ட குடிமக்கள் குழு, இணையம் வழி ஏழு நிகழ்ச்சிகளை நடத்தும். ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த சுமார் 50 பேரை அது உள்ளடக்கும்.
இளையர்களிடையே மன மீள் திறனை அதிகமாக்கும் வழிகள் குறித்து அந்த நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரி விக்கப்பட்டு உள்ளது.

