சிங்கப்பூரில் கடந்த மூவாண்டுகளில் கைதான மோசடிச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள், வேறொருவர் தவறான வழியில் ஈட்டிய பணத்தை பிறரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் ஆகியோரில் கிட்டத்தட்ட பாதிப் பேர் 30 வயதுக்கு உள்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
சூதாட்ட இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் சில விளம்பரங்கள் ஆகியவை எளிதில் பணம் சம்பாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையைத் தரக்கூடியவை. இவற்றுக்கு மயங்கும் பல இளையர்கள், தவறான வழியில் ஈட்டப்படும் பணத்தை பிறரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டான் வீ, இம்மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் உள்துறை அமைச்சுக்கான விவாதத்தில் இந்த விவகாரத்தை எழுப்பினார்.
2019ஆம் ஆண்டுக்கும் சென்ற ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைதானோரில் 1,239 பேர் 30 வயதுக்குக் குறைவானர்கள்.
ஒருவரை நம்ப வைத்து அவரின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்டு மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான சில மோசடிச் சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றுள்ளன. எளிதில் பணம் சம்பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களுக்கு இளையர்கள் மயங்குவதை இது குறிக்கலாம் என்று திரு வீ கூறினார். குறிப்பாக இணைய விளையாட்டுத் தளங்களுக்குச் செல்லும்போது இந்நிலை உருவாகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
"எளிதில் பணம் சம்பாதிக்கும் உத்திகளில் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பல விளம்பரங்கள் தென்படும்," என்று திரு வீ சொன்னார்.
தங்களின் வங்கிக் கணக்குகளைக் கொடுத்து தனிப்பட்ட சிங்பாஸ் விவரங்களை மோசடிச் செயல்களை மேற்கொண்டோருக்குத் தெரிவித்த இருவர் அண்மையில் கைதுசெய்யப்பட்டனர்.
கைதான ஒருவருக்கு 19 வயது, மற்றொருவருக்கு 25 வயது. எளிதில் பணம் ஈட்ட அவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மோசடிச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட சுமார் ஒரு மில்லியன் வெள்ளி அவ்விருவரும் விட்டுக்கொடுத்த வங்கிக் கணக்கில் போடப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. இது, அண்மையில் வெளிவந்த சில மோசடிச் சம்பவங்களில் ஒன்று.
தவறான வழியில் ஒருவர் ஈட்டிய பணத்தை வேறொருவர் பிறரிடம் ஒப்படைக்கும் செயல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். ஆனால் அவற்றில் இருக்கும் சிக்கல்களால் பெரும்பாலான வேளைகளில் அவை நீதிமன்ற விசாரணைவரை செல்வதில்லை என்பதை நாடாளுமன்றத்தில் திரு வீக்குப் பதிலளித்த உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் சுட்டினார்.
இதைச் சமாளிக்க 'சிடிஎஸ்ஏ' எனும் ஊழல், போதைப்பொருள் கடத்தல், இதர மோசமான குற்றங்கள் சட்டத்திற்கு இவ்வாண்டு கடைசி காலாண்டில் திருத்தங்கள் செய்யப்படும் என்று திரு டான் தெரிவித்தார்.

