சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் நியூவார்க் லிபர்ட்டி அனைத்துலக விமான நிலையத்திற்கு மீண்டும் நேரடி விமானச் சேவைகளை வழங்கவுள்ளது.
முன்னதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அமெரிக்காவுக்கு வாரந்தோறும் 57 சேவைகளை வழங்கியது. கொவிட்-19 சூழல் உருவெடுத்த பிறகு அந்த எண்ணிக்கை மூன்றுக்குக் குறைக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
வரும் ஜூன் மாதத்திற்குள் வாரந்தோறும் அமெரிக்காவிற்கு 62 சேவைகளை வழங்கும் நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இருக்கும். வட அமெரிக்க கண்டத்திற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழங்கும் சேவைகளின் எண்ணிக்கை கொவிட்-19 சூழலுக்கு முந்தைய காலத்தில் பதிவானதைவிட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கின் நியூவார்க் விமான நிலையத்திற்கு அது தினமும் மூன்று சேவைகளை வழங்கும்.
நியூயார்க்கிற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இத்தனை சேவைகளை வழங்குவது இதுவே முதல்முறை. அமெரிக்காவின் இதர பகுதிகளுக்கும் தனது சேவைகளை நீட்டிக்க எண்ணம் கொண்டுள்ளதாகவும் அது கூறியது.
மேலும், 12 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீண்டும் கனடாவுக்குச் சேவைகளை வழங்கவுள்ளது. இதன்படி கனடாவின் வான்கூவர் நகருக்கு சேவைகள் வழங்கப்படும்.

