லிட்டில் இந்தியாவின் சாலைகளிலும் சந்துகளிலும் சுற்றித் திரியும் சில ஆடவர்கள், கவலை இல்லாமல் விடுமுறை நாள்களைக் கழிக்க நண்பர்களைச் சந்திக்க வந்தவர்கள் போல் முதலில் தெரிவார்கள்.
ஆனால் இவர்களுக்கு மிக அருகில் சென்றால் இவர்களின் வாய் மென்மையாக 'ஹான்ஸ் ஹான்ஸ்' போன்ற சொற்களை அசைபோட்டுக்கொண்டிருக்கும், கண்கள் அங்குமிங்கும் நோட்டம் பார்க்கும்.
இவர்கள் சிங்கப்பூரில் சட்டவிரோதமாகப் புகையிலை விற்கும் பெரிய இரு கட்டமைப்பைச் சேர்ந்த கள்ள வியாபாரிகள்.
பல்வேறு இடங்களில் மெல்லும் புகையிலைப் பொட்டலங்களை ஒளித்து வைத்து தேவைப்படுவோருக்கு விற்கும் அதே வேளையில் எங்கிருந்தாவது அதிகாரிகளோ பாதுகாவல் அதிகாரிகளோ தென்பட்டால், உடனே கை சைகைகள் மூலமாக அல்லது குறுந்தகவலின் வாயிலாக ஒருவரை ஒருவர் எச்சரிப்பார்கள்.
வாயில் மெல்லும் புகையிலைக்குக் கடந்த 2016ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் இதன் விற்பனை வழக்கமாக நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக சந்தர், டெஸ்கர் சாலைகளில் உள்ள சில கடைக்காரர்கள் கூறினர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கடந்த மூன்று வாரங்களாக லிட்டில் இந்தியாவில் இந்த சட்டவிரோத மெல்லும் புகையிலை விற்பனையைக் கண்காணித்து வந்தது.
2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை வீதிகளில் சட்டவிரோதமான பொருள்கள் விற்ற 81 பேர் கைதாயினர் என்று சிங்கப்பூர் அறிவியல் ஆணையம் தெரிவித்தது. வாயில் மெல்லும் புகையிலையை இறக்குமதி செய்ததற்காக 255 பேரும் அத்தகைய புகையிலை வைத்திருந்ததற்காக 457 பேரும் கைதாயினர்.
இந்தப் புகையிலையை விற்றதற்காகக் கைதான அனைவரும் வீதிகளில் புகையிலையை விற்றவர்கள் என்றும் ஆணையம் கூறியது.
மெல்லும் புகையிலையை இறக்குமதி செய்தாலோ விற்றாலோ அந்த குற்றத்துக்கு $10,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். அத்தகைய புகையிலையை வாங்கும் குற்றத்திற்கு அதிகபட்சமாக $2,000 அபராதம் விதிக்கப்படலாம்.