ஆ. விஷ்ணு வர்தினி
உயிர்களைக் காக்கும் தாதியாகப் பணியாற்றும் திருமதி திலகவதி ராஜகோபாலால், சொந்த மகளைக் காப்பாற்ற முடியாமல்போன வருத்தத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. எனினும், தன் மகளைப் போன்று அவதிப்படும் இளையர்களுக்கு முடிந்தவரை உதவவேண்டும் என்ற எண்ணம் அவருள் வேர் ஊன்றியது.
திருமதி திலகவதி கடந்த ஆண்டு தம்முடைய மகளை எதிர்பாராத வகையில் இழந்தார். மகளின் நடத்தையில் மாற்றங்களைக் கண்ட அவர், அது குறித்து விசாரித்தபோது, தாம் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக மகள் கூறியிருந்தார். அதனை மேலும் ஆராயாத வருத்தமே திருமதி திலகவதியின் மனதிற்குள் ஆழமாகப் பதிந்துள்ளதாக அவர் வருந்தினார்.
"கொவிட்-19 சூழலால் பள்ளி வாழ்க்கை முடங்கியது. அவள் தனிமையாக இருந்தாள். எங்களது குடும்பம் ஒற்றுமையாக இருந்தபோதிலும், நண்பர்களுடன் உரையாட முடியாதது அவளைப் பாதித்தது. ஏதோ ஒரு பிரச்சினை அவளைப் பாதித்துள்ளது என்று நாங்கள் உணர்வதற்குள் காலம் கடந்துவிட்டது. அவளுக்கு உதவமுடியாமல் போனது," என்றார் திருமதி திலகவதி.
போதிய அளவு உதவவில்லையோ, ஏற்ற சூழலை உருவாக்கித் தரவில்லையோ என்ற வருத்தம் தம்மை அலைக்கழிப்பதாக சொன்னார் அவர். நேரத்தை ஒதுக்கி மகளோடு கலந்துரையாடுவதைத் தள்ளிப்போடாமல் இருந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாமோ என்றும் அவர் எண்ணுகிறார்.
தம்முடைய மகள் தவறிய தினத்தன்று திருமதி திலகவதி அவராகவே இல்லை. தம்முடைய மகள் வெளிப்படையாகத் தமது கவலைகளைச் சொல்லத் தயங்கியதையும் திருமதி திலகவதி கவனித்தார். அன்றைய தினம் திருமதி திலகவதி உறங்கிய இருபது நிமிடங்களில் மகளை இழந்தார்.
"இனி நானும் ஏன் உயிர் வாழவேண்டும் என்று எண்ணினேன். ஒரு தாயாக என் மகளைப் பொறுப்பின்றி கைவிட்டுவிட்டேன் என்றெல்லாம் சிலர் கூறியது என்னை நிலைகுலைய வைத்தது. சமூகம் என்னைக் கொலைகாரியாகப் பார்ப்பதுபோல் இருந்தது," என்று வேதனையுடன் கூறினார் அவர்.
தனியாகத் தவித்த மகளின் எண்ணவோட்டம் திருமதி திலகவதியின் குடும்பத்தாருக்கு இன்றும் முழுதாகப் புலப்படாத புதிராக உள்ளது.
இளையர்கள் குடும்பத்தாரிடம் தங்களது கவலைகளைப் பகிர்ந்துகொள்ள அஞ்சக்கூடாது என்றும் அத்தகைய சூழலைப் பெற்றோர் உருவாக்கித் தரவேண்டும் என்றும் கூறினார் திருமதி திலகவதி.

