கரிம வெளியேற்றத்தை 2050க்குள் முற்றிலும் ஒழிக்க திட்டம்
2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை முற்றிலும் ஒழிக்க சிங்கப்பூர் ஹோட்டல்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த இலக்கை அடைய பசுமை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இங்குள்ள ஹோட்டல்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
சூரிய சக்தி தகடுகளைப் பொருத்துவது, உணவுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது, தண்ணீரைச் சேமிப்பது போன்றவை அவற்றில் சில.
அடுத்த ஆண்டிலிருந்து கரிம வெளியேற்றத்தின் அளவை ஹோட்டல்கள் அணுக்கமாகக் கண்காணித்து வர வேண்டும். 2030ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும்.
இந்த இலக்குகள் நேற்று வெளியிடப்பட்ட ஹோட்டல்களுக்கான நீடித்த நிலைத்தன்மைமிக்க வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஹோட்டல்கள் சங்கமும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் இணைந்து வழிகாட்டியை உருவாக்கியுள்ளன.
ஹோட்டல்களின் கரிம வெளியேற்றத்தை முற்றிலும் குறைக்க உதவும் புதிய வழிகாட்டி உலகிலேயே முதன்மையானது என நம்பப் படுகிறது.
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஹோட்டல் களுக்கான நீடித்த நிலைத்தன்மை மாநாட்டில் பேசிய வர்த்தக தொழில் துணை அமைச்சர் எல்வின் டான், ஹோட்டல்களுக்கான உத்திகளை வழிகாட்டி வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
பசுமை சார்ந்த ஹோட்டல் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அவர் விளக்கம் அளித்தார்.
"நீடித்த பொருள்களை பயன் படுத்த வேண்டும், வளங்களை இயன்ற அளவு முழுமையாகப் பயன்படுத்த விவேகமான தானி யக்கத் தீர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
ஹோட்டல்களுக்கு வரும் பயணிகளை சுற்றுச்சூழலில் அக்கறைசெலுத்த ஊக்குவிக்க வேண்டும்," என்று அவர் தெரிவித் தார்.
"இவை முடியாத யோசனை களைக் கொண்ட கனவு அல்ல. சிங்கப்பூரில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் இதைச் செய்ய முடியும்," என்று மேலும் அவர் தெரிவித்தார்.
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 60 விழுக்காடு ஹோட்டல் அறைகள் அனைத்துலக அளவில் அங்கீகாரம் பெற்ற நீடித்த நிலைத்தன்மைக்கான சான்றிதழைப் பெற வேண்டும் என்றும் வழிகாட்டியில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்களின் நீடித்த நிலைத்தன்மைமிக்க முயற்சிகள் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த நான்கு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என வழிகாட்டி கூறுகிறது.
நீரைச் சேமிப்பது, கழிவுகளை சிறந்த வகையில் நிர்வகிப்பது, மறுசுழற்சி மற்றும் கழிவுகளை உற்பத்திக்கான வளங்களாக மாற்றும் சுழற்சி முறையிலான பொருளியல் அணுகுமுறை ஆகியவை நான்கு அம்சங்கள்.

