சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிறகு இந்த ஆண்டின் பிற்பாதியில் நடைபெறவிருக்கும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கானோர் வருகைபுரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடிஎல் எனப்படும் தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கான பயணத்தடங்கள், தளர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் ஆகியவற்றால் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் பலரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடும்.
செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் அறைகலன் கண்காட்சியில் 15 முதல் 20 நாடுகளைச் சேர்ந்த 20,000 பேர் பங்குபெறக்கூடும்.
ஃபுட்&ஹோட்டல்ஏஷியா செப்டம்பரில் ஏற்பாடு செய்திருக்கும் உணவு, பானக் கண்காட்சியில் ஏறக்குறைய 35,000 பேர் கலந்துகொள்வர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஹோட்டல்கள், உணவகங்கள் போன்றவற்றுக்கான நிகழ்ச்சியில் 30,000 பேர் வரை பங்குகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 15ஆம் தேதி சிங்கப்பூர் கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அதன்படி, நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 50 விழுக்காட்டுப் பார்வையாளர்கள் இருக்கலாம். பார்வையாளர்களைத் தனித்தனிப் பகுதிகளில் பிரித்து அனுமதிக்கவும் தேவையில்லை.
விடிஎல் பயணிகளுக்கு கொவிட்-19 கிருமித்தொற்றுச் சோதனைக்கான விதிமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன.
மேற்பார்வையின்றி சுயபரிசோதனை செய்துகொள்ளும் நடைமுறை, கூடுதலான வர்த்தகப் பேராளர்களை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. அடுத்த மாதம் இடம்பெறவிருக்கும் சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் வாரம் 2022 எனும் நிகழ்ச்சியிலும் தூய்மையான சுற்றுச்சூழல் உச்சநிலை மாநாடு சிங்கப்பூர் எனும் நிகழ்ச்சியிலும் மொத்தம் 15,000க்கும் அதிகமானோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருமிப் பரவலுக்குப் பிறகு கூடுதலானோர் நேரடியாகக் கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சிகளாக அவை அமையும்.

