400 பெண்களைத் தகாத முறையில் படமெடுத்த ஆடவர்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) ஆய்வுப் பிரிவில் பணிபுரிந்துகொண்டிருந்த சீன நாட்டவர், ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கடைத்தொகுதியில் பெண் ஒருவரின் குட்டைப் பாவாடைக்குள் படமெடுத்தபோது கையும் களவுமாக மாட்டினார்.
அதையடுத்து, அவரது வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 400 பெண்களின் குட்டைப் பாவாடைக்குள் அவர் படமெடுத்தது வெளிச்சத்துக்கு வந்தது. என்டியு, கடைத்தொகுதிகள், எம்ஆர்டி நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் அப்படங்கள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் குற்றத்துக்காக குவோ சிஹோங்கிற்கு பத்து மாதங்கள், ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மோசடி மூலம் கிடைத்த பணத்தை பெற்றதாக ஆடவர் ஒப்புதல்
இணைய மோசடி மூலம் கிடைத்த பணத்தைப் பெற்றுக்கொண்டதாக முகம்மது ஜமால் கான் பனகானி ஷஃபி கான் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரில் சொத்து வாங்க வெளிநாட்டவர் ஒருவர் தம்மிடம் $460,000 தந்ததாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் சொத்து முதலீடு, நிர்வாகத்தில் அவருக்கு எவ்வித அனுபவமும் தகுதியும் இல்லை.
உண்மையில் மின்னஞ்சல் மூலம் நடத்தப்பட்ட மோசடியில் வியட்னாமிய நிறுவனம் ஒன்றை ஏமாற்றி அப்பணம் பறிக்கப்பட்டது.
ஜமாலுக்கு 30 மாதச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

