சிங்கப்பூரில் நுழைவதற்கு 'எஸ்ஜி வருகை' அட்டை அவசியம். இதனைச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சில இணையத் தளங்கள், அந்த அட்டைக்கு விண்ணப்பிக்க $100 வரை வசூலிக்கின்றன. இத்தகைய இணையத் தளங்கள் புதிதாக முளைத்துள்ளதாக சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) தெரிவித்தது.
ஐசிஏயின் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிங்கப்பூரர்கள் உட்பட சிங்கப்பூருக்கு வரும் அனைத்துப் பயணிகளும் தங்களுடைய உடல்நலம் உள்ளிட்ட விவரங்களுடன் எஸ்ஜி வருகை அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.
ஆனால் வெளிநாட்டிலிருந்து செயல்படும் சில இணையத் தளங்கள் இதற்கு உதவி செய்ய $100 வரை கட்டணம் வசூலிக்கின்றன. சிங்கப்பூரின் பிரபல சின்னங்களான ‘மெர்லயன்’, கலை அறிவியல் அருங்காட்சியகம் போன்றவற்றின் படங்கள் இணையத் தளங்களில் இடம்பெற்றுள்ளதால் சிங்கப்பூர் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இச்சேவைகள் வழங்கப்படுவதாக பயணிகளுக்கு தவறாக வழிகாட்டப்படுகிறது.
ஆனால் இத்தயை இணையத் தளங்கள் போலியானவை அல்ல. தங்களுடைய சேவைக்கு கட்டணம் வசூலிக்கின்றன என்று ‘விதர்ஸ் கட்டார்வோங்’ சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் ஜோனத்தன் கோக் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் சொந்த விவரங்கள், கடவுச்சீட்டு எண், கடன் அட்டை எண் போன்றவற்றை தெரிவிப்பதால் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று அவர் நினைவூட்டினார்.
தற்போது 12 இணையத் தளங்கள் எஸ்ஜி வருகை அட்டைக்கு விண்ணப்பிக்க உதவும் சேவையை வழங்கி வருவதாக நம்பப்படுகிறது.