கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுவரும் அதிகமான நிலையங்கள் அடுத்த சில வாரங்களில் மூடப்படும். பத்து நிலையங்கள் இதுவரை மூடப்பட்டுள்ளன.
தற்போது 30 நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒப்புநோக்க சென்றாண்டு ஜுன் மாதம் 40 நிலையங்கள் இருந்தன.
தடுப்பூசி போடப்பட்ட விகிதம் சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி நிலையங்களும் அதற்கேற்றாற்போல் மூடப்பட்டுவருகின்றன.
தற்போது, சிங்கப்பூரின் மக்கள்தொகையில் 95 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 71 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
அதிகமான தடுப்பூசிப் போடும் நிலையங்கள் மூடப்பட்டு வரும் நடவடிக்கை சிங்கப்பூர் தொற்றுப் பரவலின் இறுதிக் கட்டத்தில் இருப்பதைக் குறிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருத்துரைத்தனர்.
மக்களுக்கு விரைவாகத் தடுப்பூசிப் போடுவதற்காக அத்தகைய நிலையங்கள் நிறுவப்பட்டன. அந்த இலக்கு ஓரளவுக்கு நிறைவேறியுள்ளது.
ஒரு வேளை நாலாவது தடுப்பூசிக்கு அவசியம் ஏற்பட்டால், அவற்றை அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்புகள் ஏற்றுநடத்த இயலும் என்று நிபுணர்கள் கூறினர்.