தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் (என்யுஎச்) அவசரகால மருத்துவப் பிரிவில் தமது நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு சிகிச்சை அளிக்காமல் அப்படியே வைத்திருந்ததாகவும் அதனால் தமது குழந்தை இறந்துவிட்டதாகவும் ஆடவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை விசாரணை நடத்துகிறது.
இம்மாதம் 15ஆம் தேதி, ஆம்புலன்ஸ் மூலம் தமது மனைவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அந்த ஆடவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
அவருக்கு அதிக அளவில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக அந்த ஆடவர் தெரிவித்தார்.
இருப்பினும், தமது மனைவிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதாக என்யுஎச் தம்மிடம் தெரிவித்திருப்பதாக அந்த 37 வயது பொறியாளர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
இதுகுறித்து மேலும் தகவல் பெற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் அவருடன் தொடர்புகொள்ள முயன்றது. ஆனால் அவருடன் தொடர்புகொள்ள முடியாமல் போனது.
இந்த ஃபேஸ்புக் பதிவு பற்றி தனக்குத் தெரியும் என்றும் துயரில் ஆழ்ந்துள்ள குடும்பத்துக்கு ஆதரவு வழங்க அதனுடன் தொடர்புகொண்டிருப்பதாகவும் என்யுஎச் கூறியது.
உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
தமக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருந்ததால் மனைவியுடன் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் போனதாக ஷின்மின் நாளிதழிடம் அந்த ஆடவர் கூறினார்.
இரண்டு மணி நேரம் கழித்து, மகப்பேறு பிரிவுக்குத் தமது மனைவி அனுப்பப்பட்டதாகவும் அதையடுத்து, அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்களும் தாதியரும் குழந்தை இறந்துவிட்டது என்று சொன்னதாகவும் அந்த ஆடவர் தெரிவித்தார்.
நிறைய ரத்தம் இழந்துவிட்ட தமது மனைவிக்கு மயக்கமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இறந்த குழந்தையின் உடல் மண்டாய் தகனச்சாலையில் எரியூட்டப்பட்டது. தமக்கும் தமது மனைவிக்கும் ஏற்கெனவே இரண்டு மகன்கள் இருப்பதாக ஆடவர் தெரிவித்தார்.
ஒரு மகனுக்கு ஏழு வயது. இன்னொரு மகனுக்கு இரண்டு வயது.
இம்மாதத் தொடக்கத்தில் தமது மனைவிக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து தமது இரு மகன்களும் நோய்வாய்ப்பட்டதாகவும் அவர் கூறினார்.


