ஆசியான் வட்டாரத்தில் மின்னிலக்கமயமாவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் சிங்கப்பூர் மிகவும் முக்கியமான பங்கை வகிப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார். இந்த வட்டாரத்தில் மின்னிலக்க ரீதியாக சிங்கப்பூருக்கு இருக்கும் தொடர்புகள் உள்ளிட்டவை இதற்கான முக்கிய காரணங்கள் என்று திரு கான் சொன்னார்.
வட்டார அளவில் மின்னிலக்க அம்சங்களை வலுப்படுத்த சிங்கப்பூர் இதர ஆசியான் உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"வர்த்தக ரீதியாக நாம் மின்னிலக்கமயமாவதற்கு (இதர ஆசியான் நாடுகளும்) மின்னிலக்கப் பரிவர்த்தனைகளைக் கையாளும் ஆற்றல்களைக் கொண்டிருக்கவேண்டும், அதனால் சிங்கப்பூர் மட்டும் மின்னிலக்கமயமாவதில் பயனில்லை.
"ஆகையால் இதில் ஒன்றாக வளர்ந்து இந்தப் பயணத்தை ஒன்றுபட்டு மேற்கொள்ளவேண்டும்," என்று திரு கான் கூறினார்.
அரசாங்கங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைப்பது மட்டுமின்றி, நிறுவனங்களும் தங்களுக்கான மின்னிலக்கமயமாதல் முயற்சிகளைத் தொடர்ந்து எடுக்கவேண்டும் என திரு கான் சுட்டினார். இதன் தொடர்பில் அரசாங்கங்களுக்கிடையே இருக்கக்கூடிய ஒப்பந்தங்களை நிறுவனங்கள் சாதகமாகப் பயன்படுத்தவேண்டும் என்பதை அவர் எடுத்துச்சொன்னார்.
ஆசியான் மாநாட்டின் ஓர் அங்கத்தில் திரு கான் பேசினார். மரீனா பே சேண்ட்ஸ் மாநாட்டு நிலையத்தில் நான்கு நாள்களுக்கு நடைபெறும் 'சிங்கப்பூர் ஏபெக்ஸ் பிஸ்னஸ் சம்மிட்' நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக ஆசியான் மாநாடு நடைபெற்றது.
நாளை நிறைவடையும் இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனமும் 'எம்பி சிங்கப்பூர்' நிறுவனமும் ஏற்பாடு செய்துள்ளன.
மின்னிலக்கமயமாதல் உலகை மாற்றப்போகிறது.
அதனால் இதற்கான முயற்சிகளை சிங்கப்பூர் இப்போதே எடுப்பது நல்லது என்பதையும் அமைச்சர் கான் குறிப்பிட்டார்.
பசுமைப் பொருளியலின் தொடர்பில் ஓர் ஒப்பந்தத்தை வரைய சிங்கப்பூர் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. கூடுதல் நாடுகள் பசுமைப் பொருளியல் ஒப்பந்தங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையை சிங்கப்பூர் கொண்டுள்ளது என்றும் திரு கான் சொன்னார்.
கரிமப் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த முயற்சிகளை எடுப்பதற்கு பசுமைப் பொருளியல் ஒப்பந்தங்களுக்கான கட்டமைப்பு வகைசெய்யும் என்று அவர் சொன்னார்.
'ஆசியான் மின்னிலக்க ஒருங்கிணைப்பு முயற்சிகளில் சிங்கப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது'

