செயின்ட் ஜான்ஸ் தீவுக்குச் செல்லும் பயணிகள் செந்தோசாவில் இருந்து உணவு, பானங்களை ஆளில்லா வானூர்தி மூலம் தருவிக்கும் வாய்ப்பு விரைவில் கிடைக்கக்கூடும். அதற்கான முன்னோடிச் சோதனைத் திட்டம் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
செந்தோசா மேம்பாட்டுக் கழகம், எஸ்டி இஞ்சினியரிங், ஃபுட்பாண்டா ஆகியவை இணைந்து அந்த முயற்சியில் இறங்கியுள்ளன.
முன்னோடித் திட்டத்தில் செயின்ட் ஜான்ஸ் தீவின் தேசிய கடல்துறை ஆய்வுக்கூடம் மற்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பின் கடல் துறை நீர்வேளாண்மை நிலையத்தின் ஊழியர்கள் தங்கள் உணவுத் தெரிவைப் பெற்றுக்கொள்வர்.
செந்தோசா, விவோசிட்டி ஆகிய இடங்களில் செயல்படும் இருபதுக்கும் அதிகமான உணவு, பானக் கடைகளில் இருந்து ஃபுட்பாண்டா செயலியைப் பயன்படுத்தி அவர்கள் உணவை வாங்கிக்கொள்ளலாம்.
செந்தோசாவின் தஞ்சோங் கடற் கரையிலிருந்து புறப்படும் ஆளில்லா வானூர்திகள் அந்த உணவை ஏழு நிமிடத்தில் செயின்ட் ஜான்ஸ் தீவில் கொண்டுசேர்க்கும்.
ஒவ்வோர் ஆளில்லா வானூர்தியும் பத்து கிலோகிராம் வரையிலான எடையைத் தூக்கிச்செல்லும். இருப்பினும் அதற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
பெரிய அளவிலான உணவுப் பொட்டலங்களை ஆளில்லா வானூர் தியில் பொருத்துவது சிரமம்.
போத்தல்களில் விற்கப்படும் பானங்கள் மட்டுமே சிந்தாமல் வாடிக்கையாளரைச் சென்றடையும்.

