சுற்றுப்பயணிகள் சட்டவிரோதமான முறையில் ஜிஎஸ்டி வரியைத் திரும்ப பெறுமாறு செய்யும் ஒரு சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டு இருந்த நகைக்கடை இயக்குநர் ஒருவருக்கு நேற்று $104,400 அபராதம் விதிக்கப்பட்டது.
மொத்தம் $16,975 ஜிஎஸ்டி வரியைச் சுற்றுப் பயணிகள் சட்டவிரோதமான முறையில் திரும்பப் பெற்றதாக தெரிவிக்கப்பட்ட வழக்கில் 'அதிர்ஷ்டம் ஜுவல்லரி' நகைக்கடை இயக்குநர் வூ சின் சாய் என்பவரும் அவருடைய சகாக்களும் சம்பந்தப்பட்டு இருந்தனர்.
அந்த ஜிஎஸ்டி வரி 2015 முதல் 2016 வரை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி வரி விதிமுறைகளுக்குக் கீழான பல குற்றங்களை வூ, 61, ஒப்புக்கொண்டார்.
வூ, 2015 மார்ச் மாதத்திற்கும் 2016 மே மாதத்திற்கும் இடையில் தன் வேலையிடத்தில் இருந்தபோது சில சகாக்களுடன் சேர்ந்து வெளிநாட்டுகாரர்கள் ஐந்து பேர் சட்டவிரோத முறையில் ஜிஎஸ்டி தொகையைத் திரும்பப் பெற உதவுவதற்குத் திட்டம் போட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கோதண்டராமன் ஞானம், கருணாநிதி ராஜேஷ், கருணாநிதி சரவணன், ராமையன் கார்த்திகேயன், வைத்தியலிங்கம் கருணாநிதி ஆகிய அந்த ஐந்து இந்திய நாட்டவர்களுக்கும், அவர்கள் செய்த குற்றச் செயல்களுக்காக 2017ல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

