கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் 2020ஆம் ஆண்டு சிங்கப்பூரைப் பாதித்தபோது திருவாட்டி மஹ்ஜபீன் ஷபிர் பாஸ்ராய் ஏமாற்றமடைந்தார். இவர் ஈடுபட்டு வந்த தொண்டூழிய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது அதற்குக் காரணம்.
'ஆர்எஸ்விபி சிங்கப்பூர்' எனும் தொண்டூழிய அமைப்பில் இவர் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றி வந்தார். கொவிட்-19 சூழலால் மெய்நிகராகப் பாடங்களை நடத்த 'ஸூம்' செயலியைத் தானாகவே கற்றுக்கொள்ளவேண்டிய நிலை இவருக்கு உருவானது.
"முதல்முறையாக மெய்நிகராகப் பாடத்தை நடத்தியபோது எனது இரு பேரப்பிள்ளைகளும் என்னுடன் உட்கார்ந்து எனக்குக் கற்றுத் தந்தனர். எனக்குக் கற்றுத் தருவதில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பாடம் நடத்தும்போது நான் பிரச்சினைகளை எதிர்நோக்கியபோது அவர்கள் உதவினர்," என்று திருவாட்டி பாஸ்ராய் கூறினார்.
கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் மின்னிலக்கமயமாகும் முயற்சிகளை மேற்கொண்டதற்காக விருது வழங்கி கௌரவிக்கும் 300,000 மூத்தோரில் இவரும் ஒருவர்.
'சி3ஏ' எனப்படும் 'கெளன்சில் ஃபோர் தெர்ட் ஏஜ்' மூத்தோர் ஆதரவு மன்றம் இவர்களைக் கௌரவிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் தங்களின் நடவடிக்கைகளை இணையம்வழி மேற்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்ட 86 பங்காளி அமைப்புகளும் கௌரவிக்கப்பட்டன. 'சி3ஏ', ஆரோக்கியமாக முதுமையடைவதை ஊக்குவிக்கும் அமைப்பு. அதன்கீழ் 'நேஷனல் சில்வர் அகாடமி' எனும் மூத்தோர் வாழ்நாள் கற்றல் கழகம் இயங்குகிறது. அந்தக் கழகம் இணையம்வழி நடத்தும் பாடங்களுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 30 விழுக்காடு அதிகரித்தது.
நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் மெய்நிகராகக் கலந்துகொண்டு பேசினார்.
"கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் சூழலில் மின்னிலக்கத் திட்டங்களை அதிகமான மூத்தோர் வரவேற்றிருப்பதில் மனநிறைவு அடைகிறேன்," என்று அவர் சொன்னார்.
நிலைமைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள முதலில் சிரமப்பட்டதாகவும் இப்போது இணையம்வழி நடவடிக்கைகளை மேற்கொள்வது எளிமையாக இருப்பதாகவும் திருவாட்டி பாஸ்ராய் கூறினார்.

