கிளமெண்டியில் நிகழ்ந்த விபத்தில் டாக்சி ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்தது. அதன் ஓட்டுநர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கிளமெண்டி அவென்யு மூன்றில் நேற்று காலை சுமார் 11 மணிக்கு சிலருக்கு பலத்த சத்தம் கேட்டிருக்கிறது. சத்தத்தைத் தொடர்ந்து அருகே ஒரு டாக்சி தலைகீழாகக் கிடப்பதை அவர்கள் கண்டனர்.
டாக்சியிலிருந்து புகை வெளிவந்ததாக சிலர் தெரிவித்தனர். அது வெடித்துவிடுமோ என்ற அச்சமும் சிலரிடையே இருந்தது.
டாக்சியின் ஓட்டுநர் அதிலிருந்து வெளியே வர முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. டாக்சிக்கு முன்னால் இருந்த வெள்ளை நிற வாகனத்தின் ஓட்டுநர் அவருக்கு உதவ முயன்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
நேற்று காலை சுமார் 11.30 மணிக்குக் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் வந்தது. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

