வயிற்றுவலி காரணமாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் நான்கு மணிநேரத்திற்குக் காத்திருந்த பிறகு வயிற்றில் இருந்த சிசுவை இழந்ததாக ஒரு கர்ப்பிணி கூறி வருகிறார். இது குறித்து அந்த மருத்துவமனை விசாரணை நடத்தி வருகிறது.
அந்தப் பெண் இணையத்தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். நோயாளிகள் சொல்வதைத் தாங்கள் முழுமையாகக் கேட்டுக்கொள்வதாகவும் இதைப் பற்றி விசாரித்து வருவதாகவும் கேகே மருத்துவமனை கூறியது.
மற்றொரு சம்பவத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் இரண்டு மணிநேரம் காத்திருந்த பிறகு தனது வயிற்றில் இருந்த சிசுவை இழந்த பெண்ணிடம் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்த நிலையில் அந்தப் பெண் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் காத்துக்கொண்டிருந்தார். இச்சம்பவம் நேர்ந்தபோது அவர் 36 வாரங்கள் கர்ப்பமாக இருந்தார்.
அந்தப் பெண்ணை மேலும் அக்கறையுடன் கவனித்திருக்கவேண்டும் என்றும் அவருக்கு சரியான பராமரிப்பை வழங்கியிருக்கவேண்டும் என்றும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தலைமை நிர்வாகி எமெரிக் லிம் அறிக்கை ஒன்றின் மூலம் கூறினார். இத்தகைய சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளைக் கவனிப்பதற்கான வழிமுறைகளை மருத்துவமனை மறுபரிசீலனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

