கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு போதிய உணவு வாங்க முடியாமல் தவித்த குடும்பங்களில் 40 விழுக்காடு குடும்பங்களின் நிலை தற்போது மேம்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒரு குடும்பத்துக்குப் போதுமான உணவு இல்லாத நிலை ஏற்பட்டாலோ அல்லது ஆரோக்கியமாக இருக்க போதிய உணவு பெறும் நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டாலோ அது உணவு பாதுகாப்பின்மையாகக் கருதப்படுகிறது.
முன்பு உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை கொவிட்-19 நெருக்கடிநிலை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை கண்டறிய சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் லியேன் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.
ஓராண்டில் குறைந்தது ஒரு முறையாவது உணவு பாதுகாப்பின்மையை அனுபவித்திருப்பதாக ஆய்வில் பங்கெடுத்த ஏறத்தாழ 1,200 குடும்பங்களில் 10.4 விழுக்காடு குடும்பங்கள் தெரிவித்ததாக 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பசி அறிக்கையின் முதல் சுற்றில் தெரியவந்தது. குறைந்தது மாதம் ஒருமுறை போதிய உணவு இல்லாத நிலை ஏற்பட்டதாக ஐந்தில் இரண்டு குடும்பங்கள் தெரிவித்தன.
2020ஆம் ஆண்டு பங்கெடுத்த குடும்பங்களில் 59 குடும்பங்களிடம் இவ்வாண்டும் ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் 44.1 விழுக்காடு குடும்பங்கள் தங்கள் நிலைமை மேம்பட்டிருப்பதாக தெரிவித்தன. குறைந்தது மிக மோசமான உணவு பாதுகாப்பின்மை நிலையிலிருந்து மிதமான உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கு உயர்ந்திருப்பதாக அவை குறிப்பிட்டன.
உணவு பாதுகாப்பின்மை பிரச்சினை தங்களுக்கு இனி இல்லை என்று இவ்வாண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பங்கெடுத்த 59 குடும்பங்களில் 12 குடும்பங்கள் தெரிவித்தன.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக உதவி கேட்டு முன்வந்த குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, உணவு வழங்கும் திட்டங்களும் கைகொடுத்திருப்பதாக ஆய்வு கூறியது.
சில குடும்பங்களின் நிலை மேம்பட்டுள்ளபோதிலும் ஆய்வில் பங்கெடுத்த குடும்பங்களில் 45.8 விழுக்காடு குடும்பங்கள், தங்கள் நிலைமையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவித்தன. நிலைமை மோசமடைந்திருப்பதாக 10.2 விழுக்காடு குடும்பங்கள் கூறின.

