உட்லண்ட்ஸில் உள்ள வீவக புளோக்குகளின் அடித்தளங்களில் இருந்த 32 மின்னிலக்கத் திரைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திரைகள் உட்குரோவ் பேட்டையில் உள்ள வீவக புளோக்குகளில் அமைந்துள்ளன.
இது குறித்து காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னிலக்கத் திரைகளைச் செயல்படுத்தும் 'டார்கெட் மீடியா' நிறுவனம், மார்சிலிங்-யூ டீ நகர மன்றம் ஆகியவற்றுடன் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்தப் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹேனி சோ ஃபேஸ்புக்கில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
"நமது குடியிருப்பாளர்களுக்குப் பலனளிக்கும் தகவல்களைத் தருவதற்காக அமைக்கப்பட்ட மின்னிலக்கத் திரைகள் இப்படி சேதப்படுத்தப்பட்டது வருத்தம் தரும் ஒன்று.
"அனைவரின் நன்மைக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள வசதிகளைக் கவனித்துக்கொள்வதில் நாம் எல்லோரும் பங்காற்றுவோம் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளேன்," என்று திருவாட்டி சோ குறிப்பிட்டார்.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 'டார்கெட் மீடியா'வையும் காவல்துறையையும் தொடர்புகொண்டுள்ளது.

