சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதிப்பேர் இணையத்தில் பாதக அனுபவங்களைப் பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது. 1,000 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட பாதிப்பேர் இவ்வாறு கூறுகிறார்கள்.
பல துறைகளை உள்ளடக்கிய 'எஎஃப்ஏ' என்ற அமைப்பு இணைய ஆபத்துகளைக் கையாளுகிறது.
அந்த அமைப்பு இணையம் மூலம் 15 முதல் 35 வரை வயதுள்ள வர்களை உள்ளடக்கி ஆய்வு ஒன்றை நடத்தியது.
பயமுறுத்துவது, சட்டாம்பிள்ளைத் தனம், தவறான அடையாளத்தைக் கூறி நண்பர்களாக ஆக முயன்றது போன்ற பாதகமான அனுபவங்கள் தங்களுக்குக் கிடைத்ததாக பாதிப்பேர் தெரிவித்தனர்.
இருந்தாலும் இவர்களில் சுமார் 43 விழுக்காட்டினர் பலன் இருக்காது என்பதால் அவை பற்றி புகார் தெரிவிக்க வேண்டாம் என்று இருந்துவிட்டார்கள்.
ஆய்வு முடிவுகளை கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் சியூ ஹான் யி வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தார்.
அத்தகைய சம்பவங்கள் பற்றி புகார் தெரிவிக்காமல் இருப்பதால் மேலும் பாதகச் செயல்கள் கூடிவிடும் என்று இளையர்கள் அனுபவிக்கும் இணைய பாதகங்கள் பற்றிய இணையக் கருத்தரங்கு ஒன்றில் பேசியவர்கள் கூறினர்.
கல்வித் துறை, மாணவர்கள், சட்டத் துறை, தொழில்நுட்பத் துறை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இணையத்தில் பலவற்றையும் விவாதித்தார்கள்.
இணையத்தில் குறிப்பாக இன்ஸ்டகிராம் போன்ற மிகவும் பிரபலமான தளங்களில் இத்தகைய பாதகச் சம்பவங்களை எதிர்நோக்குவோருக்கு ஆதரவு அளிப்பதில் பொதுமக்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்று சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்பு பல்கலைக்கழக தொடர்பு தொழில்நுட்பத்துறை பேராசிரியர் லிம் சுன் சுன் கூறினார்.
ஆய்வில் கலந்துகொண்டோரில் சுமார் 57 விழுக்காட்டினருக்கு எங்கிருந்து, எப்படி உதவி நாடுவது என்பது தெரியவில்லை. அல்லது போதிய அளவுக்கு அவர்களுக்குப் புரியவில்லை.
இந்த நிலவரமும் கவலை அளிப்பதாக கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் சியூ தெரிவித்தார்.

