செங்காங் குழுத்தொகுதியில் கட்சி கிளைகளுக்குத் தலைமை ஏற்கவிருக்கும் மூன்று புதுமுகங்களை மக்கள் செயல் கட்சி அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அந்த மூவரும் அடுத்த பொதுத் தேர்தலில் ஆளும்கட்சி சார்பில் போட்டியிடுவார்கள் என்பதற்கான அறிகுறிகள் அதன் மூலம் தெரியவந்துள்ளது.
மசெக தலைமையகச் செயற்குழுவின் தலைவர் சான் சுன் சிங் நேற்று கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இணைப் பேராசிரியர் எல்மி நெக்மாட், 40, திருவாட்டி தியோடோரா லாய், 36, திரு லிங் வெய்ஹோங், 41, ஆகிய மூவரும் கடந்த 2020ல் நடந்த பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் பாட்டாளிக் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட மசெக குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று பேருக்குப் பதிலாக பொறுப்பேற்பார்கள் என்று அறிக்கை தெரிவித்தது.
திரு இங் சீ மெங், திரு அம்ரின் அமின், திரு ரேமண்ட் லை ஆகியோர் அந்த மூவர்.
புதிய முகங்களில் பேராசிரியர் எல்மி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கலை, சமூக அறிவியல் துறையின் ஆய்வுத் துறை உதவித் தலைவர். திருவாட்டி லாய், 'பர்பிள்' என்ற உணவுச் செயலி நிறுவனம் ஒன்றின் உத்திபூர்வத் துறை தலைமை அதிகாரி. திரு லிங் தனியார் துறை வழக்கறிஞர்,
பேராசிரியர் எல்மி, செங்காங் சென்ட்ரல் கிளைக்குத் தலைமை வகிப்பார். திருவாட்டி லாய், செங்காங் வடக்கு கிளைக்கும் திரு லிங், செங்காங் கிழக்குக் கிளைக்கும் தலைமைத் தாங்குவார்கள்.
செங்காங் மேற்கு மசெக கிளையின் தலைவரான டாக்டர் லாம் பின் மின், மசெக செங்காங் குழுத்தொகுதி குழுவுக்குத் தலைமை ஏற்பார்.
திரு இங், திரு அம்ரின், திரு லை ஆகிய மூவரும் தொடர்ந்து புதிய குழுவிற்கு உதவுவார்கள்.
செங்காங் குழுத்தொகுதி மசெக குழுவிற்கான ஆலோசகராகவும் திரு இங் செயலாற்றுவார்.
பதவி விலகும் மூன்று கட்சி கிளைத் தலைவர்களுக்கும் செங்காங் குழுத்தொகுதிக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளுக்காகவும் தொண்டுகளுக்காகவும் கட்சி நன்றி தெரிவித்துக்கொண்டது.
வருங்காலத்தில் அவர்கள் தொடர்ந்து உதவுவார்கள் என்றும் கட்சி எதிர்பார்க்கிறது என அறிக்கை குறிப்பிட்டது.
இதனிடையே, செங்காங் குழுத்தொகுதியில் நேற்று வசதி குறைந்த குடும்பங்களுக்கு மளிகைப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாக்டர் லாம் ஊடகத்திடம் பேசினார்.
இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் புதிய குழு, குடிமக்களுடன் கலந்துறவாடி அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஆயத்தப் படுத்திக் கொள்ள போதிய காலஅவகாசத்தைப் பெற்றிருக்கும் என்று டாக்டர் லாம் தெரிவித்தார்.
செங்காங் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரயீசா கான், நாடாளுமன்றத்தில் பொய் கூறியதாக ஒப்புக்கொண்டு பாட்டாளிக் கட்சியில் இருந்தும் நாடாளுமன்றத்தில் இருந்தும் சென்ற ஆண்டு விலகிவிட்டார்.
இது பற்றி கேட்டபோது இது துரதிர்ஷ்டவசமான ஒரு சம்பவம் என்று டாக்டர் லாம் குறிப்பிட்டார்.

