அடுத்த இரண்டு மாதங்களில் ரமலான் நோன்பு மாதத்திற்கும் அதன் பிறகு நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்கும் முஸ்லிம்கள் ஆயத்தமாகி வரும் வேளையில் உணவில் சர்க்கரை அளவைக் குறைத்து புகைப்பிடிப்பதைக் கை விடுங்கள் என்ற இயக்கத்தை சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆரம்பித்துள்ளது.
இனிப்பு குறைவான உணவு மற்றும் குளிர்பானங்களை எடுத்துக் கொள்ளும் வழிகளை விளக்கும் நேரடிக் காட்சிகளுடன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2ஆம் தேதி நோன்பு மாதம் ஆரம்பிக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் முயற்சி செய்ய ஆரோக்கியமான பழச்சாறு, 'புபுர் சோம் சோம் பாண்டான்' டெசர்ட் செய்யும் விதத்தை சமையல் நிபுணர் மெல் தீன் கற்றுக்கொடுத்தார்.
ஹலால் ஆரோக்கிய உணவுத் திட்டத்தில் பங்கேற்கும் கடைகளிலிருந்து நோன்பு துறக்க ஆரோக்கியமான உணவு மற்றும் குளிர் பானங்களை வாங்குவோருக்கு சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் தொகுப்பும் வழங்கப்படவிருக் கிறது. இந்தத் திட்டத்தில் சோல் கார்டன், ஸ்டஃப்ட், பினாங்கு கல்சர் உள்ளிட்ட உணவகங்கள் பங்கேற்கின்றன.
நேற்று இயக்கத்தைத் தொடங்கி வைத்த சுகாதார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம், நோன்பு மாதம் அர்த்தமுள்ளது என்று குறிப்பிட்டார். சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பதை அது கற்றுத் தருகிறது என்று அவர் சொன்னார்.
இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து முக்கிய கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதால் இவ்வாண்டு நோன்பு பெருநாள் கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.
"நாம் சாப்பிடும் உணவை தேர்வு செய்வதில் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை இயக்கம் வலியுறுத்துகிறது," என்று ரஹாயு மஹ்ஸாம் குறிப்பிட்டுள்ளார்.

