தியோங் பாருவில் உள்ள செங் போ சாலையில் தமது ரோல்ஸ்-ராய்ஸ் காரை நிறுத்திவிட்டு அங்குள்ள ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
அங்கு வேறொரு கார் ஒழுங்காக நிறுத்தப்படாததால் தம்மால் செல்ல முடியவில்லை என அந்த ரோல்ஸ்-ராய்ஸ் ஓட்டுநர் குமுறினார்.
மார்ச் 24ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்தக் காணொளி, இதுவரை 35,000க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்தக் காணொளியைப் பதிவுசெய்த ஆடவர், காரை ஓட்டிச் செல்லுமாறு அந்த ரோல்ஸ்-ராய்ஸ் ஓட்டுநரிடம் உரக்கக் கூறினார்.
இதனால் அந்த ஓட்டுநருக்கும் ஆடவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தியோங் பாரு எஸ்டேட்டின் கவனத்துக்கு வந்தது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, செங் போ சாலையோரம் உள்ள சில கார் நிறுத்துமிடங்கள் திங்கட்கிழமை (மார்ச் 28) முதல் நீக்கப்படும் என்று அது கூறியது.


