பறவைச் சின்னத்தை கைவிட
உள்ளூர் நிறுவனம் முடிவு
சிங்கப்பூரின் தொழில்நுட்ப நிறுவனமான வி வி டெக்னாலஜி, பறவைச் சின்னத்தை (படம்) தனது வர்த்தக முத்திரையாக பயன்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்கவின் பிரபல சமூக ஊடக நிறுவனமான 'டுவிட்டர்' புதிய சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து அந்நிறுவனம் இம்முடிவுக்கு வந்துள்ளது.
2018ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து உருவாக்கி வரும் கைேபசி செயலியில் முகப்புப் படமாக பறவைச் சின்னத்தைப் பயன்படுத்த வி வி டெக்னாலஜி விரும்பியது.
பயனீட்டாளர்களின் வாழ்க்கை பாணிக்கு ஏற்ப பொருட்களையும் சேவைகளையும் வழங்குவது கைபேசி செயலியின் நோக்கமாகும். வி வி டெக்னாலஜி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அண்மை தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருவதாக அதன் இணையப் பக்கம் தெரிவிக்கிறது. இணைய வர்த்தக தீர்வுகளை வழங்கும் திட்டங்களில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்களையும் அது ஈடுபடுத்தியுள்ளதாக தெரிகிறது. சுற்றுலா தொடர்பான சேவைகளை வழங்கவும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்திடமிருந்து அது அனுமதி பெற்றுள்ளது. வி வி டெக்னலாஜி. பயன்படுத்த விரும்பும் நீலநிற பறவைச் சின்னம், டுவிட்டர் நிறுவனத்தின் சின்னத்தை ஒத்து இருக்கிறது. இதனால் இரு நிறுவனங்களுக்கு இடையே வர்த்தக முத்திரையை பதிவு செய்வதில் மோதல் ஏற்பட்டது. கடந்த 2018 செப்டம்பர் 10ஆம் தேதி அந்தச் சின்னத்தைப் பதிவு செய்ய வி வி டெக்னாலஜி விண்ணப்பித்திருந்தது. ஆனால் தனது சின்னத்தைப் போல இருக்கிறது என்று வாதிட்டுள்ள டுவிட்டர் நிறுவனம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கொவிட்-19
சம்பவங்கள் குறைந்தன
சிங்கப்பூரில் கொவிட்-19 தினசரி தொற்றுச் சம்பவங்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளன. சென்ற ஞாயிற்றுக்கிழமை புதிதாக 4.848 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட 694 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை அன்று 6,434 பேர் தொற்றுக்கு ஆளாகினர். 731 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஞாயிறு அன்று நான்கு பேர் தொற்றுக்கு உயிரிழந்தனர்.
வார அடிப்படையில் கொவிட்-19 தொற்று விகிதம் ஒன்றுக்குக் குறைவாக 0.75ஆக இருப்பதாக சுகாதார அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது. சனிக்கிழமை அன்று இந்த விகிதம் 0.77ஆக இருந்தது.

