ஜூரோங், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் அமைந்திருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு பொருத்தப்படவிருக்கிறது. இரண்டு வட்டாரங்களையும் சேர்ந்த 89 புளோக்குகளில் 15 கட்டமைப்புகளைப் பொருத்த வீவக திட்டமிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் இருந்து தேவைக்கேற்பக் கட்டப்படும் புதிய குடியிருப்புகளில் மழைநீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஏற்கெனவே கட்டப்பட்ட குடியிருப்புப் பேட்டைகளில், வீவக இத்தகைய சேகரிப்பு வசதிகளைப் பொருத்துவது இதுவே முதல்முறை.
இவற்றில் சேமிக்கப்படும் மழை நீரை, பொது இடங்களைக் கழுவுதல், தாவரங்களுக்கு நீரூற்றுதல் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்துவது திட்டம்.
15 கட்டமைப்புகள் மூலம் ஆண்டுக்கு மொத்தம் 17,500 கன மீட்டர் தண்ணீரைச் சேகரிக்க முடியும். இது ஓர் ஆண்டில் 85க்கும் அதிகமான நாலறை வீவக வீடுகள் சராசரியாகப் பயன்படுத்தும் நன்னீருக்குச் சமம்.
தண்ணீரைப் பாதுகாப்பதுடன் அக்கம்பக்கத்தில் திடீர் வெள்ளத்தைக் குறைப்பதற்கும் மழை நீர் வீணாக வடிகாலில் கலக்கும் வேகத்தை மட்டுப்படுத்தவும் இது உதவும்.
மழைநீர்ச் சேகரிப்புக் கட்டமைப்பைப் பொருத்துவதற்கான ஏலக் குத்தகைக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று அழைப்பு விடுத்துள்ளது. மே 20ஆம் தேதி அது நிறைவடையும்.
கட்டமைப்புகளுக்கான கட்டுமானம் அடுத்த ஆண்டு தொடங்கி 2027ல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட புளோக்குகளின் வடிகால்கள் மூலம் மழைநீர் குடியிருப்புப் பேட்டையின் வடிகால் கட்டமைப்பைச் சென்று சேரும். அங்கிருந்து மழைநீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புக்கு அனுப்பப்படும் தண்ணீர் பின்னர் தொட்டியில் தடுத்துவைக்கப்படும்.
ஒவ்வொரு கட்டமைப்பிலும் சேகரிக்கப்படும் மழைநீர், 12 புளோக்குகளின் குடிநீர் அல்லாத தண்ணீர்த் தேவைகளை ஈடுகட்ட உதவும். மறுபயனீடு செய்யப்படும் இந்த நீர் மூலம், அந்த புளோக்குகளின் 50 விழுக்காட்டுத் தண்ணீரை மிச்சப்படுத்த முடியும்.
ஈசூன் அவென்யூ இரண்டில் 201 முதல் 216 வரையிலான புளோக்குகள் மற்றும் ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1ல் உள்ள 329 முதல் 341 வரையிலான புளோக்குகள் ஆகியவை இந்தத் திட்டத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
மேலும் 1,198 வீவக அடுக்குமாடிகளிலும் அரசாங்கக் கட்டடங்கள் 57லும் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்படும் என்று வீவக நேற்று அறிவித்தது.
செம்பவாங், தெம்பனிஸ், தஞ்சோங் பகார் ஆகிய வட்டாரங்களின் வீவக புளோக்குகள், 40 பள்ளிகள், இரண்டு தீயணைப்பு நிலையங்கள் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
2027ல் ஜூரோங், ஈசூன் வட்டாரங்களின் 89 வீவக குடியிருப்புகளில் புதிய வசதி

