ஆஸ்திரேலிய நிவாரணம்: ஆயுதப்படை உதவி நிறைவு
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் வெள்ள நிவாரண உதவிப் பணிகள் நேற்று முன்தினம் நிறைவுற்றதாக சிங்கப்பூர் ஆயுதப் படை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாத இறுதியில் அவ்விரு மாநிலங்களிலும் கனத்த மழை பெய்ததால், பரவலாகப் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் 20 பேர் மாண்டனர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற நேரிட்டது.
பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் ஆஸ்திரேலியத் தற்காப்புப் படை மேற்கொண்ட நிவாரணப் பணிகளுக்கு சிங்கப்பூர் ஆயுதப் படை உதவிக்கரம் நீட்டியது. சிஎச்-47எஃப் ரக சினூக் ஹெலிகாப்டர்கள் இரண்டு நிவாரண உதவிப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. மார்ச் 7ஆம் தேதி முதல் அவசரகால உதவிப் பொருள்களையும், நிவாரணப் பணியாளர்களையும் ஏற்றிச்செல்ல அவை உதவின. சிங்கப்பூரில் இருந்தும் நிவாரணப் பொருள்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
உதவிப் பணியில் விமானிகள், விமானச் சிப்பந்திகள், பொறியாளர்கள் உள்ளிட்ட 57 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் வெகுவாக சேதமடைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் வலுவான புயல்காற்றும், கனத்த மழையும் முன்னுரைக்கப்பட்டிருப்பதால் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
விற்றுத் தீர்ந்த 'டச் அன் கோ' அட்டைகள்
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான எல்லைகள் வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து போக்குவரத்துக்கு மீண்டும் திறந்துவிடப்படவிருக்கும் நிலையில், மலேசியாவில் கட்டணம் செலுத்தும் 'டச் அன் கோ' அட்டைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமையே அட்டைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக, இந்த அட்டைகளின் அதிகாரபூர்வ சில்லறை விற்பனையாளரான 'செவன்-லெவன்' தெரிவித்தது. 'ஈஸிலிங்க்-டச் அன் கோ' அட்டைகளும் இருப்பில் இல்லை. பத்து வெள்ளி மதிப்புள்ள இரண்டு விதமான அட்டைகளும் ஏப்ரல் தொடக்கத்தில் கடைகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'டச் அன் கோ' அட்டைகள் பத்து ஆண்டுகள் கழித்தே காலாவதியாகும் என்றாலும் 12 மாதங்கள் பயன்படுத்தாவிட்டால் அவை செல்லுபடியாகா.

