தம்பதியர் விவாகரத்து செய்யும்போது முன்வைக்கப்படும் குடும்ப வன்முறைக் குற்றச்சாட்டுகள் கடுமையாகக் கருதப்படும் என்றும் குழந்தைகளைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை நீதிமன்றம் முடிவுசெய்யும் முன்னதாக இத்தகைய குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வழக்குகளில் ஆலோசகரைச் சந்தித்தல் மற்றும் மேற்பார்வையாளர் முன்னிலையில் பிள்ளைகளைக் காண்பதற்கான உத்தரவு போன்றவையும் பிறப்பிக்கப்படும்.
மணமுறிவு ஏற்படும்போது அந்தத் தம்பதியின் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக நடப்பில் இருக்கும் இத்தகைய நடவடிக்கைகள், இனி நீதிமன்ற விசாரணையில் முக்கியப் பங்கு வகிக்கவிருக்கின்றன. விவாகரத்துச் சட்டத்திலும், விவாகரத்துக்குப் பிறகு பிள்ளைகளைக் காண்பது தொடர்பான நடவடிக்கைகளிலும் அண்மையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதர் சாசனத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றன. அதன்கீழ், மனநல ஆலோசகரைச் சந்தித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னாள் கணவர் அல்லது மனைவி விவாகரத்துக்குப் பிறகு குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கப்படாவிட்டால் இழப்பீடு தரவேண்டும்; மோசமான சில வழக்குகளில் அபராதம் அல்லது சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.
தம்பதிக்குப் பிள்ளை வளர்ப்பு பற்றி கற்பித்தல், தியானம், குணமடைதலுக்கான திட்டம் அல்லது குடும்ப ஆதரவுத் திட்டம் போன்றவையும் திருத்தங்களில் அடங்கும்.
பிள்ளைகளைப் பார்ப்பதற்கான உத்தரவை நீதிமன்றம் மேலும் வலுவான முறையில் பிறப்பிக்க இந்த மாற்றங்கள் வகைசெய்யும்.
குழந்தைகள் தொடர்பான விவகாரங்களில் பிள்ளைகளின் நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பெற்றோர் தங்களுக்கு இடையிலான சிக்கல்களைச் சரிவரக் கையாளவும் பிள்ளைகளை இணைந்து வளர்க்கவும் உதவும் வழிமுறைகளில் குடும்ப நீதிமன்றம் கவனம்செலுத்துவதை அவர் சுட்டினார்.
சில சம்பவங்களில் குழந்தை துன்புறுத்தப்பட்டதாலோ அதைப் பராமரிக்கும் தாய் அல்லது தந்தை வன்முறைக்கு ஆளானதைப் பார்த்தோ மிகவும் பயந்திருக்கலாம்.
அவ்வாறு துன்புறுத்திய தாய் அல்லது தந்தை குழந்தையைப் பார்க்க வருவதை அது மனத்தளவில் ஏற்றுக்கொள்ளத் தயாராகும்வரை நீதிமன்றம் அவரது வருகையைத் தடைசெய்யக்கூடும்.
குடும்ப வன்முறையால் குழந்தை மிகவும் பயந்திருந்தால் விவாகரத்து ஆதரவுக்கான நிபுணத்துவ அமைப்புகளை நாடலாம் என்று கூறப்பட்டது.
வன்செயல்களில் ஈடுபடும் பெற்றோர் பிள்ளையைக் காண அனுமதித்தால் அந்தக் குழந்தையும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு என்பதை ஆய்வாளர்கள் சுட்டினர்.

