வேலைதேடுவதிலும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், இளம் மலாய் மற்றும் முஸ்லிம் தம்பதியர் இனி கூடுதல் உதவிபெற இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசதிகுறைந்த குடும்பங்கள் சொந்த வீட்டை வாங்குவதற்கு ஆதரவு தரும் அரசாங்கத் திட்டங்கள் வரையறுக்கப்படுவதால் இது சாத்தியமாகும்.
20 முதல் 25 வயது வரையிலான இளம் தம்பதியருக்கு மத்திய சேமநிதிப் பங்களிப்புடன்கூடிய நிரந்தர வருமானம் தரும் வேலைகளைப் பெறும் வாய்ப்புகள் அதிகம்; இதனால் வீடு வாங்க கடன்பெறவும் அவர்களால் இயலும் என்பதை பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் சுட்டிக்காட்டினார்.
தற்போது இந்தப் பிரிவைச் சேர்ந்த பலரும் மத்திய சேம நிதிப் பங்களிப்பு இல்லாத வேலைகளில் இருப்பதை அவர் குறிப்பிட்டார்.
வரவுசெலவுத் திட்டத்துக்குப் பிந்தைய கலந்துரையாடலில் அவர் பேசினார்.
மற்ற இனத்தவரைக் காட்டிலும் வீவக வாடகை வீடுகளில் குடியிருக்கும் மலாய்க் குடும்பத்தினரின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து பங்கேற்பாளர்கள் அமைச்சரிடம் கவலை தெரிவித்தனர்.
மலாய்க்காரர்கள் பின்தங்கியிருப்பதாக இதற்குப் பொருள் அல்ல; வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூடுதலான வாடகை வீடுகளைக் கட்டுவது இதற்குக் காரணம் என்று அமைச்சர் கூறினார்.

