இப்போதைக்கு மின்னியல் சாலைக் கட்டணங்களில் (இஆர்பி) எந்த மாற்றமும் இல்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆயினும், போக்குவரத்து வேகங்களையும் நெரிசல் நிலவரத்தையும் ஆணையம் தொடர்ந்து கண்காணிக்கும்.
அத்துடன், கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளில் தொடர்ந்து மாற்றங்கள் இடம்பெறுவதால் இஆர்பி கட்டணங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதையும் ஆணையம் மதிப்பிடும்.
போக்குவரத்து நிலவரம் குறித்த ஆணையத்தின் அண்மைய மறுஆய்வுக்குப் பின் இவ்விவரங்கள் வெளியிடப்பட்டன. அடுத்த மறுஆய்வு எப்போது இடம்பெறும் எனத் தெளிவாகத் தெரியவில்லை.
முந்திய மறுஆய்வு கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுற்றது. அப்போது, ஆயர் ராஜா விரைவுச்சாலை மற்றும் மத்திய விரைவுச்சாலையின் சில பகுதிகளில் நெரிசலைச் சமாளிக்கும் விதமாக சில நுழைவாயில்களில் இஆர்பி கட்டணம் $1 உயர்த்தப்பட்டது.
இப்போது, ஏழு இடங்களில் மட்டும் இஆர்பி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொவிட்-19 தொற்றுப் பரவலுக்குமுன் தீவில் 29 இடங்களில் அக்கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

