சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து அமைப்பில் தங்களது பங்களிப்பிற்காக 47 நிறுவனங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் விருது வழங்கி, நிலப் போக்குவரத்து ஆணையம் சிறப்பித்தது.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் நிலப் போக்குவரத்து ஆணைய உன்னத விருதுகள் நிகழ்ச்சி சிங்கப்பூர் எக்ஸ்போவில் நேற்று இடம்பெற்றது.
இம்முறை விருது நிகழ்ச்சியில், குறிப்பாக சாலைகளும் ரயில்களும் பேருந்துகளும் பயணிகளுக்குப் பாதுகாப்பானதாக விளங்கச் செய்யும் திட்டங்கள்மீது கவனம் செலுத்தப்பட்டது.
அவ்வகையில், மூத்த குடிமக்கள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க உதவிடும் முப்பரிமாண சாலைக் குறியீடுகளை அமைப்பதில் முக்கியப் பங்காற்றிய பொத்தோங் பாசிர் குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் தலைவர் 65 வயது சுவா கியன் மெங் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் பொத்தோங் பாசிர் அவென்யூ 1ல் முப்பரிமாண சாலைக் குறியீடுகளை அமைக்க நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் அவர் இணைந்து பணியாற்றினார். அப்பகுதியில் மூத்த குடிமக்கள் அதிகம் வசிப்பதால் வாகன ஓட்டுநர்கள் மெதுவான வேகத்தில் வாகனங்களை இயக்க அந்த முப்பரிமாண சாலைக் குறியீடுகள் வகைசெய்கின்றன.
"அந்த 3டி குறியீடுகள் வெவ்வேறு வடிவத்திலானவை; எளிதில் கவனிக்கத்தக்கவை. அவை வாகன ஓட்டுநர்களிடம் உளப்பூர்வத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை அமைக்க விரும்பினோம்," என்றார் திரு சுவா.
வாகன வேக வரம்பு 40 கிலோமீட்டரைத் தாண்டாதபடி இருப்பதை உறுதிசெய்யத் தாங்கள் விரும்பியதாகக் கூறிய அவர், இந்த ஏற்பாட்டை வாகன ஓட்டுநர்களும் நடையர்களும் வரவேற்றுள்ளதாகவும் சொன்னார்.
இப்போது நான்கு பகுதிகளில் இத்தகைய 3டி தடக் குறியீடுகள் உள்ளன.
பொதுப் போக்குவரத்து ஊழியர்களும் எஸ்எம்ஆர்டி, டவர் டிரான்சிட் போன்ற முக்கியப் போக்குவரத்து நிறுவனங்களும் தங்களது திட்டங்களுக்காக பாராட்டுப் பெற்றன.
விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், குறிப்பாக நிலப் போக்குவரத்தின் மூலம் வெளியிடப்படும் உமிழ்வுகளைக் குறைக்கும் சிங்கப்பூரின் முயற்சியில் தனியார் நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்து வருவதாக மெச்சினார்.

