கொவிட்-19 நெருக்கடிநிலை, உக்ரேன்-ரஷ்யா போர் போன்ற பிரச்
சினைகளை விநியோகத் தடை, புவிசார் அரசியல் போட்டி, பயங்கரவாதம், இணையம் மூலம் தாக்கு தல்கள் ஆகியவை ஏற்பட்டு உலகளாவிய நிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று தெரியவந்திருப்பதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்தார்.
இத்தகைய பிரச்சினைகளை ஒவ்வொரு நாடும் ஏற்றுக்கொள்ளும் அனைத்துலகக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ளலாம் என்றார் அவர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற புத்ராஜெயா கருத்தரங்கில் பேசியபோது டாக்டர் இங் இவ்வாறு கூறினார்.
கருத்தரங்குக்கு மலேசிய தற்காப்புப் பயிற்சிக் கழகம் ஏற்பாடு செய்தது. பல்வேறு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள், அதிகாரி கள், கல்விமான்கள் ஆகியோர் அதில் கலந்துகொண்டு தற்காப்பு தொடர்பான விவகாரங்கள் பற்றி கலந்துரையாடினர். தென்கிழக்காசிய வட்டாரத்தில் ஆசிய நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்குத் தேவையான மூன்று அம்சங்களை டாக்டர் இங் கோடிட்டுக்காட்டினார். ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையும் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "சர்ச்சைகள் ஏற்படும்போது படையெடுப்புகள் நிகழக்கூடாது. மாறாக, அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்," என்று அமைச்சர் இங் கூறினார். ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து முடிவெடுக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று டாக்டர் இங் கூறினார். நாடுகளிடையே பிரச்சினை எழுந்தால் அதைப் பற்றி பேசி தீர்வு காண பொதுவான தளம் ஒன்று இருக்க வேண்டும் என்றார் அவர்.
பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் நாடுகளுக்கிடையிலான நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு அங்கீகரிக்கப்படுவதை தளம் மூலம் மேம்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர் இங்.

