லசாரஸ் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன ஆடவரின் உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. 43 வயது திரு குர்னியா ஹார்டியாமான் சுமார்டியின் உடல் நேற்று அதிகாலை 2.50 மணி அளவில் கரையோரம் ஒதுங்கியது. அவரது மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லசாரஸ் தீவு அருகில் உள்ள கடற்பகுதியில் ஆடவர் ஒருவர் மாயமானதாக தகவல் கிடைத்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்
பகல் 1.25 மணி அளவில் லசாரஸ் தீவின் அருகே உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
லசாரஸ் தீவு கடற்பகுதியில் திரு குர்னியா நீந்திக்கொண்டிருந்தபோது அவர் கடலில் மூழ்கியதாக அவரது மாற்றான்
மகளான 28 வயது திருவாட்டி யானா அசிமான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
"என் தாயாருக்கு அன்பான கணவராகவும் அவர் இருந்தார். நாங்கள் சிறிது காலத்துக்கு
மட்டுமே ஒன்றாக வாழ்ந்தோம். என் நலனிலும் அவர் அக்கறை காட்டினார்," என்று திருவாட்டி யானா பதிவிட்டார்.
துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்த திரு குர்னியா, தமது குடும்பத்துடன் லசாரஸ் தீவுக்குச் சென்றிருந்ததாக திருவாட்டி யானா கூறினார்.
தீவைவிட்டு புறப்படுவதற்கு முன் கடற்கரைக்குச் செல்ல விரும்புவதாக திரு குர்னியா தமது குடும்பத்தினரிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
நண்பகலாகியும் திரு குர்னியாவை இன்னும் காணவில்லை என்று உணர்ந்தார் திருவாட்டி யானாவின் தாயார். கடல் மிகவும் ஆழமாக இருந்ததாகவும் குடும்பத்தினர் அனைவரும் கவலையில் ஆழ்ந்ததாகவும் திருவாட்டி யானா தெரிவித்தார்.

