சிங்கப்பூரில் ஏறக்குறைய 1,500 மோசடிச் சம்பவங்களில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 457 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. அவர்களில் 316 பேர் ஆண்கள்; 141 பேர் பெண்கள்.
மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவோரில் ஆக இளையவரின் வயது 13; ஆக முதியவருக்கு 73 வயது.
காவல்துறை மற்றும் வர்த்தகக் குற்ற விவகாரங்கள் பிரிவின் அதிகாரிகள், இம்மாதம் 11ஆம் தேதிக்கும் 28ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தீவு முழுவதும் நடத்திய சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இணையக் காதல் மோசடி, மின்-வர்த்தக மோசடி, சீன அதிகாரிகளைப் போல் நடித்து ஏமாற்றியது மற்றும் முதலீடு, வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப ஆதரவு, கடன் ஆகியவை தொடர்பான மோசடிகள் போன்றவை தொடர்பில் 457 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, உரிமம் இன்றி கட்டணச் சேவைகள் வழங்கியது போன்றவற்றில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இவர்களிடம் விசாரணம் நடத்தப்படுவதாகக் காவல்துறை கூறியது.
மோசடிக் குற்றத்துக்கு பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். பணமோசடி நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ 500,000 வெள்ளி வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
உரிமம் இன்றி சேவைகள் வழங்கிய குற்றத்துக்கு மூன்று ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையோ 125,000 வெள்ளி வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
மோசடிக் குற்றங்களைக் கடுமையாகக் கருதுவதாகவும் அதில் ஈடுபடுவோர் சட்டப்படி தண்டிக்கப்படுவர் என்றும் காவல்துறை குறிப்பிட்டது.
பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களையோ கைத்தொலைபேசியையோ யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று நினைவுறுத்தப்படுகிறது.
வங்கிக் கணக்கோ கைத்தொலைபேசியோ குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டது நிரூப்பிக்கப்பட்டால், அவர்கள் அதற்குப் பொறுப்பாகக் கருதப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்தது.

