புக்கோம் தீவில் அமைந்துள்ள 'ஷெல் ஈஸ்டர்ன் பெட்ரோலியம்' நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 59 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள எரிபொருள் திருடப்பட்டதில் தொடர்பிருப்பதாக 34 வயது முகமது ஃபர்ஹான் முகமது ரஷீது ஒப்புக்கொண்டார்.
2014ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையில் நடந்த பெரிய அளவிலான அந்தத் திருட்டில் ஈடுபட்டதன் மூலம் அவருக்கு 735,000 வெள்ளிக்கும் அதிகமான தொகை கிட்டியது.
எரிபொருள் திருட்டு தொடர்பில் சுமத்தப்பட்ட 13 நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டுகளை ஃபர்ஹான் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
குற்றச் செயலின் மூலம் ஈட்டிய 270,000 வெள்ளியைக் கையாண்டது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளையும் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான ஒரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார். மே 26ஆம் தேதி அவருக்கு தண்டனை விதிக்கும்போது மேலும் 25 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

