பிரைட் ஹில் எம்ஆர்டி சந்திப்பு நிலையத்தையும் குறுக்குத் தீவு வழித்தடம் கட்டம் 1ன் கீழ் அமைக்கப்படும் சுரங்கப்பாதைகளையும் வடிவமைத்து கட்டுவதற்காக சுமார் $526 மில்லியன் குத்தகையை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியது.
சிங்கப்பூரில் பூமிக்குக் கீழே கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் வல்லமை பெற்றுள்ள 'பென்டா ஓஷன் கன்ஸ்ட்ரக்ஷன்' என்ற நிறுவனத்திற்கு அந்தக் குத்தகை கொடுக்கப்பட்டு இருப்பதாக ஆணையம் தெரிவித்தது.
பணிகள் இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030ல் பயணிகள் சேவை தொடங்கும். புதிய ரயில் நிலையம் சின் மிங் அவென்யூவில் அமையவிருக்கும் புதிய ஒரு போக்குவரத்து முன்னுரிமை பாதையுடன் இணைக்கப்படும்.
இந்த 2 கி.மீ. பாதைப் பணி இந்த ஆண்டு இரண்டாவது பாதியில் தொடங்கி 2029ல் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரைட் ஹில் சந்திப்பு நிலையம் கட்டி முடிக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படும்போது பயணிகள் குறுக்குத் தீவு வழித்தடத்திற்கும் தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடத்திற்கும் இடையில் மாறிச் செல்ல வசதியாக இருக்கும்.

