சிங்கப்பூர் கொவிட்-19 கிருமியுடன் வாழ வேண்டிய காலம் வந்துவிட்ட சூழலில், பொறுப்புடன், விவேகத்துடன் சிங்கப்பூரர்கள் நடந்துகொள்ளவேண்டியது மிகவும் முக்கியமானது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.
இப்போதைய காலத்தில் சட்டங்கள் என்பவை சட்டங்கள் மட்டுமே என்று அமைச்சர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
திரு ஓங், ஒன் எஃப்எம் 91.3 வானொலிக்குப் பேட்டி அளித்தார்.
"சட்டத்திற்கு உட்பட்டு நீங்கள் செயல்பட வேண்டும்.
"அதேவேளையில், பொறுப்புடன், புரிந்துணர்வுடன் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும்.
"உட்புறங்களில் காற்றோட்டம் அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் அத்தகைய இடங்களில் முகக்கவசத்தை நீங்கள் அணிந்துகொள்ள வேண்டும்," என்று அமைச்சர் தெரிவித்தார்.
பொறுப்புடன், விவேகத்துடன் நடந்துகொண்டதால்தான் இப்போதைய நிலையை அடைந்து இருக்கிறாம். இனியும் இது அவசியம் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
கடைத்தொகுதிகள், மின்தூக்கிகள், போக்குவரத்து, உணவங்காடி நிலையங்கள் போன்ற உட்புற இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் என்பது கட்டாயமானது.
இருந்தாலும் பேருந்து நிறுத்தங்கள், காலித்தளங்கள் போன்ற வெளிப்புற இடங்களைப் பொறுத்தவரை மக்கள் அதை விரும்பினால் அணிந்து கொள்ளலாம்.
மின்தூக்கியில் தனியாக இருக்கும்போதும் முகக்கவசத்துடன் இருப்பதில் தப்பில்லை என்றார் திரு ஓங்.
இந்த நடைமுறை சிறார் விளையாட்டுத் திடல்களிலும் பொருந்தும்.
திடலில் கூட்டம் அதிகம் என்று பெற்றோர் நினைத்தால் தங்கள் பிள்ளையை வேறு இடத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லலாம்.
அல்லது முகக்கவசத்துடன் பிள்ளை விளாயாடலாம் என்றால் அவ்வாறே செய்யலாம் என்றார் சுகாதார அமைச்சர் திரு ஓங்.
கிஸ்92 எஃப்எம், ஒன் எஃப்எம் 91.3 ஆகிய இரண்டு எஸ்பிஎச் மீடியா வானொலிகளுக்கும் தனித்தனியாக அமைச்சர் பேட்டி அளித்தார்.
சிங்கப்பூர் எல்லைகளை மறுபடியும் திறந்துவிடும் திட்டம் பற்றிய கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மிகக்கவனமாக நடந்துகொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் விதிகள் அனைத்தையும் ஒரே நாளில் அகற்றிவிட இயலாது என்ற திரு ஓங், படிப்படியாகவே அதைச் செய்வதே நம் அணுகுமுறை என்று கூறினார்.
கொவிட்-19 கிருமி அறவே ஒழியாது. சளிக்காய்ச்சல் போன்ற நோய்களுடன் வாழ்வதைப்போல் இனி நாம் கொவிட்-19 கிருமியோடும் வாழவேண்டும். ஆகையால் இது எப்படி என்பதை நாம் கற்போம் என்று அவர் தெரிவித்தார்.

