வழக்கறிஞராகத் தாம் பணியாற்றத் தொடங்கியபோது, நீதிமன்ற வழக்குகளைக் கையாள்வது ஆண்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்றும் பெண்கள் வர்த்தக, சொத்துரிமை சட்டம் தொடர்பிலான பணிகளில் ஈடுபடுவதே நல்லது என்றும் தம்மிடம் கூறப்பட்டதாக பிரதமர் அலுவலக அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார். எனினும், தாம் வழக்குகளை கையாளும் முன்னணி வழக்கறிஞராக உருவெடுத்ததோடு 2003ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
"தவறான எண்ணத்துடன் அத்தகைய கருத்துகளை யாரும் தெரிவிக்கவில்லை, இருந்தாலும் வர்த்தக, சொத்துரிமை விவகாரங்களுக்குத்தான் பெண்கள் பொருத்தமாக இருப்பர் என்ற அதிகம் வெளிப்படுத்தப்படாத ஊகம் பொதுவாகவே இருந்தது," என்று நிதி, தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான இரண்டாம் அமைச்சருமான குமாரி ராஜா கூறினார்.
வேலையிடங்கள், வீடுகள் ஆகிய இரு வகையான சூழல்களிலும் இத்தகைய மறைந்திருக்கும் ஊகங்களைக் கையாள கூடுதல் முயற்சியை எடுக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
நன்யாங் வர்த்தகப் பள்ளியின் அனைத்துலக மகளிர் தினத்திற்கான கலந்துரையாடலில் குமாரி ராஜா பேசினார். கடந்த திங்கட்கிழமையன்று பெண்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான வெள்ளை அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.

